எழுதியவர்: சபி அரவிந்த்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு !!
எப்போதும் போல அன்று மையூரி நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தாள். அந்தப் பார்க்கில் மிக நீண்ட நேரம் தினமும் ஐந்து முறை வலம் வருபவள் இன்று மிகவும் சோர்ந்த நிலையில் மூன்று முறை மட்டுமே வலம் வந்து பார்க்கின் மூளையில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்.
அப்பொழுது தினமும் நடைபயிற்சிக்கு வரும் சிலர் அவளை பார்த்து என்ன மையூரி இன்று சீக்கிரமா சோர்ந்து அமர்ந்திருக்கிறாய் என்றனர். என்னனு தெரியல இன்னைக்கு ரொம்ப முடியல என்று கூறினாள்.
அப்பொழுது அவள் தோழி பிரித்திகா அங்கு வந்தாள் ஹாய்! டி எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, இது இப்போ எத்தனாவது மாசம் ரொம்ப சந்தோஷமா இருக்குடி உன்னை இப்படி பார்க்கிறதுக்கு, என்று மிகவும் மகிழ்ச்சியாக அவளிடம் பேசினாள். ஆம் மையூரி மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது கர்ப்பமாக உள்ளார் அதை கண்ட பிரித்திகா அவளிடம் தற்போது இப்படி கேட்டாள்.
அப்போதுதான் மையூரிக்கு தன்னுடைய கடந்த காலம் கண்ணின் முன் மின்னி சென்றது. மையூரிக்கு தற்பொழுது 34 வயதாகிறது அவள் மிகுந்த திறமைசாலி அவள் படிக்கும் பொழுதும் சரி, பணிபுரியும் இடத்திலும் சரி, அவள் பேச்சுக்கு என்று ஒரு தனி சர்க்கிள் அவளை சூழ்ந்து கொண்டே இருக்கும் அவ்வளவு நன்றாக பேசுவாள்.
மிக நேர்த்தியான உடல் வாகு கருமையான நீண்ட கருங்கூந்தல் மீன் போன்று இரு விழி அழகு, கண்களாலே பேசும் அளவிற்கு இரு விழிகள் அழகு. என்னதான் திறமையும், அழகும் பெண்களுக்கென்று இருந்தாலும் இந்த சமுதாயத்தில் திருமணத்திற்கு பிறகு குழந்தை இல்லாத பெண்களின் அவநிலை சொல்வதற்கே மிகவும் கடினமான ஒன்று தான். அதிலும் கிராமங்களில் வாழும் பெண்களின் நிலை ஆகக் கொடுமையான நிலையாக அமைந்து விடுகிறது.
இந்த சமுதாயத்தில் அவள் ஒவ்வொரு நிமிடமும் இந்த எட்டு ஆண்டுகளாக பட்ட துன்பத்திற்கெல்லாம் சேர்த்து தற்பொழுதுதான் அவள் கர்ப்பமாகி உள்ளாள். அதை கண்டவுடன் தான், தன் தோழி பிரித்திகா தன்னிடம் இப்படி கேட்கிறாள் என்பதை அவளுக்கு இப்போதுதான் நன்றாக உரைத்தது.
ஹே! மையூரி, உன்கிட்ட தாண்டி கேட்டுட்டு இருக்கேன் என்ன யோசிக்கிற ரொம்ப நேரமா, நான் உன்கிட்ட பேசுறது கேக்குதா, ஹே….ஹே….என்றாள் பிரித்திக்கா….சுயநினைவுக்கு வந்தவளாய் மையூரி, ஹாய்! ப்ரீத்திகா எப்படி இருக்க உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு நீ பேசின உடனே நான் என்னுடைய பழைய நினைவுக்கு போயிட்டேன்டி, நல்லா இருக்கேன்டி, எனக்கு ரொம்ப சந்தோஷமா தான் டி இருக்கு இப்ப நான் கர்ப்பமாக இருக்கிறத நெனச்சு. இது இப்போ ஒன்பதாவது மாசம் டி, என்றாள்.
இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென மையூரிக்கு வலி ஏற்பட அவள் சுழன்று என்னால் முடியல ப்ளீஸ் என்று கத்த ஆரம்பித்து விட்டாள்…. இதை பார்த்த பிரித்திகா விற்கு என்ன செய்வது என்று புரியாமல் பதப்பதைத்து நின்றாள்.
அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து ஒரு ஆட்டோவில் இருவரும் ஏறி சென்றனர்.. போகும் வழியில் மையூரியின் கணவருக்கு பிரித்திகா கால் செய்து விவரத்தை கூறினாள்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மையூரிக்கி பல ட்ரீட்மென்ட்க்கு பிறகு தான் தற்பொழுது குழந்தை உருவாகி இருந்தது, அதன் காரணமாக அவள் உடலில் மருந்துகளின் ஒவ்வாமை சில இருந்தன. அதன் காரணமாக அவளுக்கு வலி மிகவும் கொடுமையாக இருந்தது, போகும் வழியிலேயே அவளால் வலி தாங்க முடியாமல் மற்றும் ஏதோ இன்பெக்சன் காரணமாகவும் ஒரு கட்டத்தில் இறந்து விட்டாள்… அதை அறியாத பிரித்திகா அவள் வலியில் மயங்கி விட்டாள் என்று நினைத்து,எப்படியாவது மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல நினைத்தால், ஆனால் போகும் வழியில் பயங்கர ட்ராபிக் இருந்ததால் அவர்களால் முன்னேறி செல்ல இயலவில்லை.
அன்று சிஎம் மீட்டிங் அந்த பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அந்தப் பகுதி முழுவதும் மிகுந்த டிராபிக்கில் இருந்தது.. பிரித்திகாவும் செய்வது அறியாமல் திகை திகைத்துப் போனாள்.
மையூரி இறந்த செய்தி தெரியாத பிரித்திகா, மையூரி! உன்னை கண்டிப்பா நான் காப்பாத்திடுவேன் கவலைப்படாதே, கவலைப்படாதே என்று தட்டிக் கொடுத்தபடி சென்றாள்.
ஆட்டோக்காரரிடம் வேகமாக விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டாள். நான் என்னம்மா செய்யட்டும் எங்க பார்த்தாலும் கட்சி மீட்டிங் என்று கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் குறுக்கு வழி தெரிந்தால் தயவு செய்து கூட்டிகொண்டு செல்லுமாறு கேட்டாள். சிறிது பொறுங்கள் நான் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று ஆட்டோக்காரரும் சொன்னார்.
உள்ளே கர்ப்பிணி பெண் இருப்பதை கண்ட ஆட்டோக்காரர் தனக்குத் தெரிந்த குறுக்கு பாதையை தேர்ந்தெடுத்து அங்கே செல்ல முற்பட்டார். அப்படி செல்லும் போதும் வழியெல்லாம் ஆங்காங்கே மக்கள் கூட்டம் சந்துகளிலும் நின்று கொண்டு தான் இருந்தார்கள் ஆகையால் வேகமாகசெல்ல முற்பட்டும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
அதே வேளையில் மையூரியின் கணவர் ராகுலும் பிரித்திகா கால் செய்ததன் காரணமாக மிகவும் விரைந்து தன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த வேலையில் பிரித்திகா மீண்டும் ராகுலுக்கு கால் செய்து மருத்துவமனைக்கு செல்ல முடியாத அளவிற்கு இங்கு ட்ராபிக் உள்ளதாக அவனுக்கு தெரிவித்தாள். அவனோ தன் மனைவியின் நிலை அறிய வேகமாக மையூரி இப்ப எப்படி இருக்கா? இப்ப எப்படி இருக்கா? என்று மீண்டும் மீண்டும் கேட்டான். அவ இறந்ததை தெரியாத பிரித்திகாவும் அவள் மயங்கி உள்ளதாக கூறினாள். தட்டிக் கொடுத்து ஏதாவது பேச்சு கொடுக்குமாறு ராகுலும் பிரித்திகாவிடம் கூறினான்.
அதெல்லாம் சரிதான் ஆனால் மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாமல் இங்கு திணறி கொண்டு நிற்கிறோம், என்று அவள் கூறினாள். உடனே ராகுல் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று google மேப்பை அனுப்புமாறு கூறினான். பிரித்திகாவும் தன் போனில் இன்டர்நெட்டை ஆன் செய்து அவனுக்கு தான் இருக்கும் இருப்பிடத்தின் கூகுள் மேப்பை சென்ட் பண்ணிணாள். இருசக்கர வாகனம் என்பதால் அந்த மீட்டிங்கின் சந்து பொந்துகளில் புகுந்து ராகுல் அந்த இடத்தை வந்து அடைந்தான். பின்பு பிரித்திகா மற்றும் ஆட்டோக்காரரின் உதவியுடன் மையூரியை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து பிரித்திகா பிடித்துக் கொண்டு மெதுவாக மருத்துவமனையை அடைந்தனர்.
இதுவரையிலும் மையூரி மயங்கிய நிலையில் இருந்தால் என்று இருவரும் நினைத்து கொண்டிருந்தனர் மருத்துவமனையில் அனுமதித்த பிறகு மருத்துவர் அவளை செக் செய்தனர் பின்பு மருத்துவர் இவர் இறந்து குறைந்தது அரை மணி நேரம் ஆகிறது என்று கூறினார்.
இதைக் கேட்ட ராகுலுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. பிரித்திகாவும் திக் பிரம்மை பிடித்தது போல் நின்று கொண்டிருந்தாள். அவ்வளவு முயற்சி செய்தும் தன் தோழியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று குற்ற உணர்ச்சியில் அவள் திகைத்து நின்றாள். ஒருவேளை அந்த கட்சி மீட்டிங் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சரியான நேரத்தில் அழைத்து வந்திருக்கலாமோ? என்று அவர்கள் மீதும் அவளுக்கு மிகுந்த கோபம் வந்தது.
மக்களின் நலனுக்காக தான் அமைச்சர்கள் ஆனால் அமைச்சர் கூட்டத்திற்கு கொடுக்கும் மரியாதை மக்களின் உடல்நலத்திற்கும் மக்களின் நலனிற்கும் இந்த நாட்டில் கொடுக்கப்படாமல் போவது பேர் அவலம் என்று அழுதாள்..
பின்பு மருத்துவ குழு சிறிது நேரம் முயற்சித்து குழந்தை உயிரோடு இருக்கிறதா என்று என்று சோதித்துப் பார்த்தனர். ஆம் “அந்த அதிசயம்” அப்பொழுது நடந்தது குழந்தை உயிருடன் தான் இருந்தது. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து கடின முயற்சியினால் பிரித்து எடுத்தனர்.
மருத்துவர் ஒருவர் ராகுலிடம் சென்று. “தன் உயிரை ஈந்து ஒரு பெண் உயிரை கொடுத்துள்ளார்” உங்கள் மனைவி என்று ராகுலின் கையில் குழந்தையை கொடுத்தார்.
இதைக் கண்ட ராகுலுக்கு பேரதிர்ச்சியாகி முழு சந்தோஷத்தில் உறைந்து போக வேண்டியவன் மனம் சுக்குநூறாக உடைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. தன்னிலை தடுமாறி கீழே விழப் பார்த்தான். இதை கண்ட பிரித்திகா அவனை கை தாங்கலாக பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்தாள். அமர்ந்தவன் மீண்டும் சுயநினைவுக்கு வந்து ஓ…. என்று வாய் திறந்து கதறி கதறி அழ ஆரம்பித்தான்.
இதை கண்ட பிரித்திகாவிற்கு ராகுலை என்ன கூறி ஆறுதல் செய்வது என்று புரியாமல் அவளும் ஒரு கனம் அழ ஆரம்பித்து விட்டாள். அப்பொழுது ராகுலுக்கு தன் மனைவியின் பழைய நினைவுகள் அவனுடைய விழியோரம் வந்து வந்து சென்றது.
ஆம் இந்த சமுதாயத்தில் ராகுலும் மையூரியும் கடந்த எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் பட்ட அவமானங்கள் எல்லாம் அவன் கண்முன்னே வந்து சென்றது. தற்போது குழந்தை இருந்தும் தன் மனைவி தன்னுடன் இல்லாத அந்த பேரதிர்ச்சி அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எட்டு ஆண்டுகாலமாக குழந்தை இல்லாததால் மையூரியை தன் குழந்தை போலவே நினைத்து ஒவ்வொரு நாளும் அவன் ஆற்றுதல் தேற்றுதலாக அவன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆம் அவனுக்கும் அவள் மனைவியை மிகவும் பிடிக்கும். அவனை குழந்தை போலவே ஒவ்வொரு நாளும் பாவித்து அன்பு காட்டி வந்தாள், தற்போது அவள் இல்லாத குறை அவனால் எந்த விஷயத்திலும் ஈடு செய்ய முடியாத பேரதிர்ச்சியாக இருந்தது. இதெல்லாம் கனவா இருந்துவிடக் கூடாதா என்று அந்த அரை நொடி அவன் மனம் கடவுளை வேண்டியது. கடவுளே என் மையூரி என்கிட்ட கொடுத்துவிடு ப்ளீஸ் ப்ளீஸ் என்று கதறி! கதறி! அழுதான்.
அந்த நொடியில் மருத்துவ குழுவில் இருந்த ஒரு மருத்துவர் ராகுலிடம் வந்து அவனுடைய குழந்தையை கையில் இருந்து வாங்கி அறையில் இன்குபேட்டரில் வைக்க முற்பட்டனர்… குழந்தை பெற்றுக் கொள்ளும் இந்த நொடிக்காக தானே 8 ஆண்டுகள் காத்திருந்தோம்..ஆனால் தற்போது அவன் விழிகளில் கண்ணீரோடு…. குழந்தையை பார்ப்பதா? தன் மனைவியை பார்ப்பதா? என்று தெரியாமல் இந்த வேதனையை வாயால், மனதால் எந்தவித வார்த்தைகளாலும் சொல்ல முடியாத துன்பத்திலும், வேதனையிலும் பேரதிர்ச்சியில் தன் குழந்தையின் முகத்தை பார்த்து அம்மா இல்லடா….. நமக்கு அம்மா இல்லடா…… என்று கதறி கதறி அழுது கண்ணீரை குழந்தையின் கண்களின் மீது விழ வைத்தான்…. புரியாத அந்த குழந்தையும் அம்மா அம்மா என்று அழ ஆரம்பித்து விட்டது..
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த தன் குழந்தையை கூட கொஞ்ச முடியாத நிலையை உருவாக்கிய அந்த கடவுளை நொந்து கொள்வதா? இல்லை தன் விதியை நொந்து கொள்வதா? என்று புரியாமல் ராகுல் திணறி போய் அங்கே உறைந்த நிலையில், தான் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
பின் தன் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மருத்துவமனைக்குள் ஐ சி யு வார்டில் செல்ல முற்பட்டான். அங்கே வந்த செவிலி பெண் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவரை தடுத்து வெளியே அனுப்பி விட்டாள்.
எல்லா ப்ராசஸும் முடிந்து தன் மனைவியின் உடலை ராகுலிடம் மருத்துவ குழு ஒப்படைத்தது.. மையூரியின் உடலைக் கண்ட ராகுல் மிகவும் மனம் உடைந்து அங்கே மயங்கி விழுந்து விட்டான்.
சில நேரங்களில் வாழ்க்கை இப்படித்தான் பல பேருக்கு சரியாக வாழ நினைக்கும் போது முடிந்து விடுகிறது.. வாழ்க்கை நமக்கு பிடித்ததாய் இன்று மாறும் நாளை மாறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்த தம்பதிக்கு வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் போது வாழ்க்கையே முடிந்து விட்டதே! “இது என்ன கடவுளின் செயல்” விதியை நம்புவதா? இல்லை மதியால் வெல்வதா? என்று புரியாத ஒரு வாழ்க்கை நமக்கு தேவை தானா?
தன் மனைவியை இழந்த வேதனையிலும் தன் மனம் தளராத ராகுல் தன் குழந்தையை தன் மனைவியே மீண்டும் பிறந்தால் என்று நினைத்து மேற்படி வளர்க்க ஆரம்பித்தான்..
தன் மனைவி இறந்த அந்த நொடியில் அவன் மனதில் எழுந்த சிறு வேதனையை உங்களிடம் வரியாக கூற விரும்புகிறேன். குழந்தை இல்லை, குழந்தை இல்லை என்று கூறி சமுதாயத்தில் பல பேரை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள் ஆனால் அந்த குழந்தை இல்லாமல் இருந்திருந்தால் அந்தப் பெண்ணாவது உயிரோடு இருந்திருப்பாள் ஆனால் சமுதாயத்திற்காக பயந்து தன் உயிரை ஈந்து இன்னொரு உயிரைக் கொடுத்தால் அந்தப் பெண்மணி. தன் மனைவியை இழந்த ராகுலும் என்னதான் மனைவியை குழந்தையின் முகத்தை வைத்து மறந்தாலும் அவனால் அவளுடைய இடத்தை இறுதி வரையில் ஈடு செய்யவே முடியாமலே போய்விட்டது.
ஆம் வெளியில் இருந்து பார்க்கும் அனைவரும் குழந்தையை வைத்து இவன் சந்தோஷமாக வாழ்கிறான் என்று கூறினாலும் அவன் உள்ளத்தில் இருக்கும் கவலையையும் கண்ணீரையும் அறிந்தவர் அந்த குழந்தை மட்டுமே….
விதியின் பிடியில் சிக்கிய மரணித்த கர்ப்பிணியுடன் ஒரு நாள் பயணித்த பிரித்திகாவின் கதை இது முற்றும்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.