படம் பார்த்து கவி: எப்போதும்

by admin 1
41 views

எப்போதும் உன் நினைவு கோடுகள் நீங்குவதில்லை

அறைச்சுவர்களின் விரிசல்களுக்கிடையே நுழைந்து கொள்ளும்

சிறு பூச்சிகளென உன் நினைவு கூடு கட்டிகொண்டிருக்கிறது

உறங்கிய விழிகளின் இரவு நிறத்திற்குள்

ஊடுருவிடும் கனவுகளுக்குள் உன் பிம்பம்

வானவில் வளைவுகளென முழு அக எதிரொளிப்பை

நீர்த்திவலைகளென நிறைத்து வைத்திருக்கும்

ஒரு கணம் உடைகையில் மறுகணம் பிறப்பெடுக்கையில்

அனுதினம் அசைபோடுகையில் நீ நிறைந்த

மூளை நரம்புகள் பச்சையம் மறந்திருக்கும்

நினைவோடு பேசுகையில் என் வார்த்தைகள்

உன் பெயரை தானே சூடிக்கொள்ளும்

யாரோ ஒருவரிடம் சிலாகித்து கொண்டிருக்கும்

மொத்த நினைவுகள் உன்னிலிருந்து சுரந்திடும்

உடனிருக்கும் உறவுகளுக்கு தெரியாத உன்னை

உயிர் ரேகையென பிடித்து வைத்திருக்கும்

என் ஆன்ம ரகசியத்தில் நீ ஒளிந்திருக்கிறாய்

எங்கெங்கோ உன்னை தேடும் அவர்களுக்கு

எப்படி சொல்வது ….

இதயத்தின் துடிப்பில் நாசியின் துவாரத்து காற்றில்

திரை விலக்கும் பிம்பத்தில் மறைபொருளென

என்னை உயிர்ப்போடு வைத்திருப்பதே நீ தான் என்பதை …..

🌺நிழலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!