படைப்பாளர்: G. அழகுலட்சுமி
ஏலே! குழந்தை குட்டிங்க கேட்பாரற்று கைவிட்டுப் போன ஆச்சி மயிலம்மாள் பேசுதேம்ல, தீடிர்னு நாலு வேற்று கிரகவாசிக குடிசைக்கு வந்தாக, ஆச்சிக்கு என்ன செய்தம்னே தெரியல, இருந்தாலும் தமிழனுக்கே உரிய சிறப்பான மாண்பு விருந்தோம்பல் தானே, ஆகையால் எம் பூட்டன் பாட்டன் வாழ்ந்து கழிச்சு மாண்டுப்போன உலகத்தை தேடி வந்துள்ள விருந்தாளி மக்கா மாற்றுலக வாசிகள மனமார வரவேற்று காபி, தண்ணீ கொடுத்து திண்ணையில குந்த வச்சு நலம் விசாரிச்சேடோய்!
“ஏலே ராசாக்காளா… நீங்க, உங்க பொஞ்சாதி, குழந்தை குட்டியெல்லாம் சௌக்கியமாடே, அப்புறம் வீட்டுல ஐயா, அம்மா, ஆச்சி, அண்ணாச்சி எல்லாம் எப்படி இருக்காக” நா பொக்கை வாய் அளவளாவி விசாரிக்க, அவக என்ன சிரிச்ச முகத்தோட பார்த்தாக,
“ஏப்பு! என்ன விஷயமா இந்த கிழவிய தேடி வந்தீக” என்று காரியத்தையும் நா கேட்டேன்.
நா பேசுற தித்திக்கும் தமிழ் மொழி அந்த உலகஉருண்டை மண்டையங்களுக்கு புரியலபோல, திறுதிறுவென விழிச்சானுங்க, அப்புறம் அவனுங்க புரியும் பாஷையில் விளிச்சானுங்க, அவனுங்க பேசிட்டே இருக்கும்போதே ஆச்சி வெடக்கோழியை பிடிச்சி காரம் தூக்கலாய் போட்டு குழம்பு வச்சு அந்த ஏலியன் வாசிகளை வயிறு நிறைய உண்ண விட்டு,
“ரொம்ப தூரத்திலருந்து பயணம் பண்ணி வந்து இருப்பீகப்பு, மறுபடியும் உங்க கிரகத்துக்கு தூரமா போவீக…வழியில பசிக்கும் இந்தாங்கடே ஆச்சி கஞ்சிகட்டி வச்சி இருக்கேன், எத்திட்டு போங்க” ன்னு கொடுத்தே.
பதிலுக்கு அந்த ஏலியன் வாசிக எனக்கு முத்தம் கொடுத்து என்னத்தையோ கையில கொடுத்தானுங்க பார்த்தா,
“பூமியை அழிக்கதான் நாங்கள் இங்கே வருகைப்புரிந்தோம், ஆனால் எங்களை இன்புற வரவேற்று பசியாத்திய இந்த ஆச்சியில் உள்ளம் இலகினோம், கீழே உள்ள பூமித்தாயிக்கு ஈடாக மேலே கருணை தாய்கள் நிறைய உண்டுன்னு கண்ணார பார்த்துட்டோம், தாய்கள அழிக்க மனசு வரல, அதுனால கிளம்புறோம், ஆச்சி எங்கள பார்த்தத வெளியே சொல்லுங்க உங்களுக்கு காசு கொடுப்பாங்க” ன்னு இருந்துச்சி
நா சிரிச்சிட்டு சாணி தட்ட கிளம்பிட்டேடோய்!!
முற்றும்.