ஒரு நாள் போட்டி கதை: அலட்சியம் ஆபத்து 

by admin 2
60 views

எழுதியவர்: பூமலர் 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு !

இரவு மணி 10. சென்னைப் புறநகரில் குளிர் ஊசி போல உடலைத் தைத்தது. அனைவரும் போர்வைக்குள் நிம்மதியாக உறங்கும் நேரம். கைபேசி அழைக்க, உறங்கலாம் என்று இருந்த நான் சலிப்புடன் எழுந்து சென்றேன். என் பன்னிரண்டு வயது மகள் விழித்து என்னை பார்த்துக் கொண்டு இருந்தாள்.  ஒன்பது வயது மகன் உறங்கி விட்டான். அவர்களை பார்த்துக் கொண்டே அலைபேசியை எடுத்தேன்.

           “ஹலோ. சொல்லு இளங்கோ”

            “அண்ணே! பார்சல் ரெடியா இருக்கு. உடனே டெலிவரி குடுக்கணும்”

            “மணி 10 ஆகுது டா. என் வீட்ல இருந்து காட்டுப்பாக்கம் வரவே ஒரு மணி நேரம் ஆகும். எந்த குடோன் க்கு குடுக்கணும்?”

         “பூந்தமல்லி தான்னே”

          “டேய்! என் வீடு குன்றத்தூர் ல இருக்கு. அங்க இருந்து காட்டுப்பாக்கம் வந்துட்டு, திரும்ப பூந்தமல்லி போயிட்டு, வீட்டுக்கு வர மூணு மணி நேரம் ஆகிடும். புள்ளைங்க தனியா இருக்கும் டா”

           “புரியுது னே. ஆனா நைட் டெலிவரி. எக்ஸ்ட்ரா காசு தர சொல்லி இருக்காரு மொதலாளி. ஸ்கூல் பீஸ் கட்டணும் ன்னு சொன்னியே. அதன் வேற யாரையும் கூப்பிடாம உன்னை கூப்பிடுறேன்”

           “சரிடா. வரேன் ” என்று கைபேசியை அணைக்க, மகள் அருகில் வந்தாள்.

            “டெலிவரி போகணுமா பா?”

           “ஆமா மா. காசு அதிகமா கிடைக்கும். நாளைக்கு பீஸ் கட்டிடலாம். நான் பக்கத்து வீட்டு லட்சுமி பாட்டிகிட்ட சொல்றேன். உங்க கூட இருப்பாங்க. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன். பயப்படாம இருங்க”

           “ஒன்னும் பயம் இல்ல பா. நான் பாத்துக்குறேன்” என்று ஆட்டோ சாவியைக் கையில் கொடுத்தாள் மகள்.

           சொந்த ஆட்டோ. அப்பா கட்டிய சிறு வீடு. இவைதான் இவர்களின் சொத்து. திருமணம் செய்து ஆறு ஆண்டுகள் கழித்து, சம்பாதிக்கத் திறமை இல்லை என மனைவி விவாகரத்துக் கோற, சண்டையிட்டு பிள்ளைகளை என்னிடம் இருத்திக் கொண்டேன். உடன் பிறந்தவர்களோ சொந்தமோ யாரும் இல்லை. செல்லும் வழி எல்லாம் கடந்த பத்து ஆண்டுகள் பட்ட கஷ்டங்களை நினைத்துக்கொண்டேன்.

இரவு பதினோரு மணிக்கும் சென்னை உறங்கவில்லை. உணவுக் கடைகள், திரை அரங்குகள் திறந்து இருந்தன. போக்குவரத்தும் அதிகமாகவே இருந்தது.
ஆட்டோவில் காட்டுப்பாக்கம் சென்று, பேப்பர் கம்பெனி முன்னால் நின்றேன். இளங்கோ வெளியில் வந்தான்.

           “ரெண்டு பண்டல் பேப்பர் னே”

         “என்னடா வெறும் ரெண்டு பண்டல் கா வர சொன்ன?”

           “ரொம்ப அர்ஜென்ட் னே. அதான். இந்தா காசு. மூவாயிரம் ரூபா. முதலாளி கிட்ட வாங்கி வச்சேன்”

          “நன்றி டா. இப்போ நிலைமைக்கு ரொம்ப அவசியம். சரி கிளம்புறேன்”

காட்டுப்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி போகும் வழியில் திரும்பியதும், மெயின் ரோட்டை விட்டு விலகி, சந்தடி இல்லாத வழியாக சென்று கொண்டு இருந்தேன். அங்கே ஒரு திருமண மண்டபத்தில் விஷேஷம் முடிந்து பலரும் கலைந்து சென்று கொண்டு இருந்தனர். காரிலும் ஆட்டோவிலும் பைக்கிலும் சென்று கொண்டு இருந்தனர். பார்த்திக் கொண்டே சென்ற எனக்கு, மண்டபத்தைத் தாண்டி இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தில் கவனம் பதிந்தது. அங்கே ஒரு பெண், பட்டுபுடவை கட்டி, நகைகள் அணிந்து, அமர்ந்திருந்தாள். பக்கத்தில் ஐந்து வயது சிறுவன் எட்டி எட்டி ரோடை பார்த்தபடி இருந்தான். திருமணத்திற்கு வந்தவர்கள் பஸ் வரக் காத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. மணி இரவு 11:20. என் மனது கேட்கவில்லை. அருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினேன்.

          “அம்மா! என்னமா இந்த நேரத்துல இங்க தனியா நிக்கிறீங்க? பஸ் வர லேட் ஆகும் மா. குழந்தையை வச்சுக்கிட்டு எங்கம்மா போகணும்”

          அவள் கூர்மையாக என்னைப் பார்த்தாள். கொஞ்சம் பதற்றமாக இருந்தாள். மகனைக் கையில் பிடித்துக்கொண்டு, “நான் குன்றத்தூர் போகணும். ஆட்டோ சொல்லிட்டேன். வரதுக்கு தான் வெயிட் பண்ணுறேன்” என்ற படி கஷ்டப்பட்டு எழுந்து நின்றாள். அப்பொழுது தான் அவள் கர்பிணி என்பது தெரிந்தது. ஏழு அல்லது எட்டு மாதம் இருக்கலாம்.

            “என்னமா இந்த நேரத்துல தனியா வரலாமா? கர்பமா இருக்க பொண்ணு. கூட யாரும் வரலியா? என்ன மனுஷங்க. எங்க வீடும் குன்றத்தூர் தான். வாம்மா. இங்க பக்கத்துல ஒரு கம்பெனி ல டெலிவரி குடுக்கணும். குடுத்துட்டு நேர வீட்டுக்கு போய்டலாம். வாம்மா தங்கச்சி”

          “இல்ல பரவாயில்லை. என் கிட்ட காசு கம்மியா தான் இருக்கு”

         “காசு யாரும்மா கேட்டா.

“நான் ஏற்கெனவே ஆட்டோ சொல்லிட்டேன். இன்னும் வரல. வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”

           “இந்நேரம் ஆட்டோ புக்கிங் எல்லாம் எடுக்க மாட்டாங்க மா. உன் அண்ணன் மாதிரி நினச்சுகோ. வாம்மா. பனி வேற அதிகமா இருக்கு” என்று வற்புறுத்தினேன். முப்பது வினாடிகள் என்னை கூர்ந்து பார்த்துவிட்டு அரை மனதாக ஏறிக்கொண்டாள்.

           “ரெண்டு பண்டல் பேப்பர் தான் மா இருக்கு. வழக்கமா ஆட்டோ நிறைய இருக்கும். அப்போ யாரையும் ஏத்திக்க முடியாது. நல்லவேளையா இன்னைக்கு கம்மியா இருக்கு. உங்க நல்லா நேரம் தான்” என்று விட்டு கண்ணாடியில் பின்னாடி பார்த்தேன்.  அவள் என்னை முறைத்தபடி அமர்ந்திருந்தாள். எனக்கு என்ன தவறு என்று புரியாமல் அமைதியாக ஓட்டினேன். பூந்தமல்லி கம்பெனியில் வண்டியை நிறுத்த, அங்கே இருந்த காவல்காரர் பால்ராஜ் சிரித்தார்.

          “வாப்பா. உனக்காகத்தான் எல்லாரும் காத்திக்கிட்டு இருக்கோம். அர்ஜன்ட் ன்னா நீ தான் முன்ன பின்ன ஆனாலும் உதவிக்கு வருவ. இந்நேரம் முதலாளி இருந்துட்டு இப்போ தான் வீட்டுக்குப் போனாரு. இங்க இறக்கி வச்சுட்டு. பசங்கள வந்து எடுத்துக்க சொல்றேன். வீட்ல புள்ளைங்க தனியா இருக்கும். நீ கிளம்பு. அப்புறம் இந்த காச முதலாளி குடுக்க சொன்னாரு” என்று கொடுத்தார்.

            “நல்லது அண்ணே. எதோ என்னால முடிஞ்சது. இத ஒரு கை பிடிங்க. இறக்குவோம்” என்று உள்ளே திரும்பி “கொஞ்சம் கால எடுத்துக்கோமா” என்று சொல்லி விட்டு பால்ராஜ் உதவியுடன் பேப்பர் பண்டலை இறக்கிப் போட்டு விட்டுக் கிளம்பினேன்.

          “அவ்ளோ தான் மா. நேரா வீட்டுக்குதான் போறோம். உங்க வீடு குன்றத்தூர் ல எங்க இருக்கு?”

           “வெல்கோ காலனி ல இருக்கு”

         “ஓ! எங்க வீட்டுப் பக்கத்துல தான் இருக்கு. ஒரு ரெண்டு கிலோமீட்டர் இருக்கும். அங்க எங்க மா இருக்க?”

          “ரெண்டாவது குறுக்கு ரோடு ல கடைசி வீடு”

         “அட நம்ம குமரேசன் அண்ணா வீடு கூட அங்க தான் இருக்கு. அவரும் ஆட்டோ வச்சு இருக்காரு. எங்க ஸ்டாண்ட் தான். உனக்கு தெரிஞ்சு இருக்கணுமே”

           “தெரியும் அவங்க வீட்டுக்கு எதிர் வீடு தான்”

         “சரிம்மா. புள்ளத்தாச்சி பொண்ணு இப்டி எல்லாம் தனியா வராத. சரியாமா? பாரு தொண்ட கட்டி இருக்கு போல. கரகரன்னு இருக்கு குரல் “

           “இங்கேயே நிறுத்துங்க”

        “ஏம்மா மெயின் ரோடு ல இறங்குற? மணி ஒன்னு ஆக போகுது. வீட்டுலேயே விட்டுடறேன்”

          “இல்ல. ஏற்கெனவே வீட்ல என்னை திட்டுவாங்க. என் மாமியார் சந்தேகப்படுவாங்க. நான் பாத்துக்குறேன்” என்று கூறி நடந்து விட்டாள். நானும் வீடு வந்து உள்ளே செல்லும் முன் ஆட்டோவை ஒரு முறை சுற்றிப் பார்க்க, உள்ளே பெண்களின் கைப்பை கிடந்தது.

          “அய்யயோ! அந்தப் பொண்ணு மறந்துடுச்சு போலயே. வீட்ல வேற பிரச்சனை ன்னு சொல்லுச்சு. இதுக்கு வேற திட்டப் போறாங்க. குடுத்துருவோம் ” என்று வண்டியைக் கிளப்பினேன்.

           அந்தத் தெருவில் கடைசிக்குச் சென்று அவள் கூறிய அடையாளம் கொண்ட வீட்டைப் பார்க்க அதிர்ந்து போனேன். அது பாழடைந்த நிலையில் இருப்பதாகத் தோன்றியது. இரவில் மற்ற வீடுகளில் எல்லாம் விடிவிளக்குகள் எரிய, இந்த வீட்டின் மேல் தெரு விளக்கு வெளிச்சம் கூட படாமல் இருந்தது. கேட் தாண்டி வீட்டிற்குச் செல்லும் வழி எல்லாம் புதர்கள் மண்டிக் காணப்பட்டன. பராமரிக்க ஆள் இல்லை போல என்று கூறி நான் கேட் திறக்க முற்பட, அப்பொழுது “யார் அது?” என்ற கண்டிப்பான ஆண் குரலில் மிரண்டு திரும்பினேன்.

              “குமார் அண்ணே! நான்தான். இங்க ஒரு சவாரி பேக் மறந்துட்டு போய்ட்டாங்க. குடுக்க வந்தேன்”

           “அதுக்கு எதுக்கு அந்த வீட்டுக்குள்ள போற?”

           “அந்தப் பொண்ணு இந்த வீட்டு அட்ரஸ் தாண்ணே சொல்லுச்சு. பாவம் புள்ளத்தாச்சி வேற”

          “நீ பாத்தியா? இப்போ உள்ள போகாத. காலைல ஸ்டாண்ட் க்கு வா பேசிக்கலாம். இப்போ உடனே போ”

          “ஏண்ணே கோவப்படுற?”

          “டேய். சொன்னா கேளு. சின்னப் புள்ளைங்கள வச்சு இருக்க. போ. காலைல வந்து சொல்றேன்” என்று விரட்டாத குறையாக துரத்தி விட்டார். புரியாமல் வந்து படுத்து விட்டேன். நான் வெளி அறையில் தூங்க, மகள் மகன் மற்றும் பக்கத்து வீட்டுக்கு பாட்டி மூவரும் உள் அறையில் உறங்கிக் கொண்டு இருந்தனர். காலை ஆறு மணிக்கு என் மகளின் அலறல் சத்தம் கேட்டு அவசரமாக எழுந்து ஓடினேன். அவள் என்னைப் பார்த்து தான் அலறினாள். ஒன்றும் புரியாமல் “என்னமா ஆச்சு? எதுக்கு மா பயப்படுற?” என்று கேட்டு அருகில் சென்றாள் மேலும் அலறினாள். என்னை விட்டுப் பின்னால் தள்ளி சுவரில் மோதி, கண்களை மூடி அலறினாள்.

            பாட்டி, “ஏப்பா இப்படி அகால நேரத்துல போயிட்டு வீட்டுக்கு வர? வயசு புள்ள இருக்குற வீடு. காத்து கருப்பு கூடவே வருமே. இரு ராவுதார கூட்டிட்டு வரேன் ” என்று கூறி விட்டுக் கிளம்பினாள். மகளின் அலரளில் கண் விழித்த மகனும் அவள் அருகில் அமர்ந்து புரியாமல் அழுது கொண்டு இருந்தான். நான் அமைதியாக வெளியில் வந்து அமர்ந்தேன். ஐந்து நிமிடங்கள் கடக்க திடீர் என என் முன்னால் ஒரு பந்து உருண்டு வந்தது. என் மகனின் பந்து. அவன் தான் விளையாடுகிறான் என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தேன். ஆனால் அவனோ பயந்து போய், கண்களை விழித்து, அந்தப் பந்தையே பார்த்தப்படி அவன் அக்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். ஒன்றும் புரியாமல் நான் நாற்காலியில் இருந்து எழ, அப்பொழுது அந்தப் பாட்டி ராவுத்தரை அழைத்து வந்து இருந்தார்.

          அவர் வீட்டின் அருகே வர, அதே நேரம் குமரேசன் அண்ணனும் அங்கே வந்தார். அவர் தலையில் கட்டு போடப்பட்டு இருந்தது. குமரேசனைப் பார்த்து ராவுத்தர் விசாரிக்க, இருவரும் எதோ தீவிரமாகப் பேசுவது கண்டு நான் வெளியில் செல்ல எத்தனிக்க, ராவுத்தர் கை காட்டி என்னை உள்ளேயே இருக்க சொன்னார். நான் குழப்பத்துடனும் பயத்துடனும் நின்று இருந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து குமரேசன் அண்ணன் என்னைப் பாவமாக பார்த்து விட்டு சென்று விட, ராவுத்தர் உள்ளே வந்தார். நுழைந்தவுடன் கையில் வைத்து இருந்த தண்ணீரை என் மேல் தெளிக்க, எனக்கு லேசான உடல் எரிச்சல் ஏற்பட்டது. அப்படியே திரும்பி மேலே பார்த்த வண்ணம் அறைக்குள் சென்றவர், என் மகளின் மேல் நீரைத் தெளிக்க, அவள் “ஆஆ…” என்று கோபமாக அலறினாள். “இங்க இருந்து போய்டு” என்று அவள் ராவுத்தரை முறைத்தபடி கூற, அந்தக் குரல் நேற்று இரவு ஆட்டோவில் வந்தப் பெண்ணின் குரலாகக் கேட்க, நான் விழி பிதுங்கி நின்று இருந்தேன்.

           “யார் நீ? உனக்கு என்ன வேணும்?” என்று ராவுத்தர் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்.

           “உனக்குத்தான் தெரியுமே. இப்போ தான வந்து சொல்லிட்டுப் போனான்” என்று நக்கலாக பதில் கூறினாள் மகள்

           “உனக்கு என்ன வேணும் “

           “அவனோட உயிர் வேணும். அவனோட குடும்பம் வேணும். அவனோட புள்ளைங்க அவன் கண்ணு முன்னாடி சாகனும் “

             “எதுக்கு? அவன் என்ன பன்னான்?”

             “இன்னைக்கு நான் இப்டி இருக்கக் காரணமே அவன் தான்”

             “இல்ல. உன் நிலைக்கு காரணம் நீ தான். அவன் தெரிஞ்சு எந்த தப்பும் பண்ணல. அப்டியே தப்பா இருந்தா கடவுள் தண்டனை குடுப்பாரு. நீ உன் உலகத்துக்குப் போ. எத்தனை நாள் உன் குழந்தை இப்படி அலையும்?”

             “என் குழந்தை மட்டும் தான் எனக்கு எல்லாமும் ன்னு இருந்தேன். புருஷன், மாமியார், மாமனார் ன்னு எல்லாரும் என்னை எவ்ளோ கொடுமை படுத்தினாங்க. அதை எல்லாம் தாங்கிட்டு இவனுக்காக இருந்தேன். வயித்துப் புள்ளய பாக்க முடியாம போச்சே. நீ சொல்றதும் சரி தான். என் நிலைக்குக் காரணம் நான் தான். தப்பே செய்யாமல் தண்டனை குடுக்கும் போதும் அமைதியா அழுதுக்கிட்டே இருந்தேன். மேல மேல அழ வச்சாங்க. எதோ புள்ளைங்களுக்காக ன்னு பணிஞ்சு போனது தப்பு தான். சொந்த அத்தை மக கல்யாணம். அவ்ளோ தூரம் தனியா போக வேண்டாம் ன்னு என் புருஷனை கூப்பிட்டேன். அவனுக்கு என்னை விட அவங்க அம்மா தான் முக்கியம். நான் தனியா போய், லேட்டா கிளம்பி வர பஸ் இல்லாம போன் பண்ணா, சுவிட்ச் ஆப் ன்னு வருது. நாங்க இருக்கோமா செத்தோமா ன்னு கவலை இல்லாமத் தூங்கிட்டான். இவன் எல்லாம் என்ன புருஷன்? பஸ் வராம, கூட யாரும் இல்லாம, ஏழு மாச வயித்து புள்ளையோட, ரோட்ல போற ஆட்டோவை நிறுத்த பாத்தேன். கூட யாரும் இல்லாம என் சொந்தம் முன்னாடி எவ்ளோ அசிங்கம் தெரியுமா? காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு நாதி இல்லாம நின்னேன். அவன்க பேச்சை கேக்க முடியாம தான் பஸ் ஸ்டாண்ட் வந்தேன். ரோம்ப நேரமா எந்த வண்டியும் வரல. இவன் ஆட்டோ வந்துச்சு. நான் கவனிக்காம அழுத்துக்கிட்டு இருந்தேன். என் பையன் ஆட்டோவ நிறுத்துறேன் ன்னு நாடி ரோடுக்கு ஓடிப் போய்ட்டான். நானும் பின்னாடியே போனேன். ஆட்டோ நிக்காம போயிடுச்சி. பின்னாடி வேகமா வந்த வேன் இடிச்சு….. என் குழந்தை….. காரணம் யாரு…… ஆஆஆஆ யாரு?”

             கேட்ட என் மனம் உறைந்து விட்டது. அப்படியே என் மகளின் காலில் விழுந்தேன். கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.  “மன்னிச்சுடு மா. மன்னிச்சுடு மா. இது ஆறு மாசம் முன்னாடி நடந்துச்சு தான? அன்னைக்கு வண்டி முழுசா சரக்கு இருந்துச்சு மா. நினச்சு இருந்தால் கூட உங்கள கூட்டிகிட்டு போய் இருக்க முடியாது மா. ஆனா உன் பையன் ஓடி வந்தது பாத்து நான் நிறுத்தி இருக்கணும். உண்மைய சொல்லி இருக்கணும். அப்போ இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வந்து இருக்காது. தப்பு தான். என் உயிர கூட எடுத்துக்கோ. என் பொண்ண விட்டுரு மா” என்று காலைப் பிடித்துக் கதறினேன்.

            “எனக்குக் கோபம் இருந்துச்சு. வேணும்னே விட்டு போய்ட்ட ன்னு நினச்சேன். ஆறு மாசமா அங்கேயே தான் காத்து இருந்தேன். இன்னைக்கு நீ கிடைச்ச. ஆனா நீயா என்னை கூட்டிட்டு வந்த. ஆட்டோ காலியா இருந்திருந்தா கண்டிப்பா என்னைக் கூட்டிட்டு வந்து இருப்ப ன்னு புரிஞ்சுது. அதான் உன்னை எதுவும் பண்ணாம வீட்டுக்குப் போனேன். அங்க என் புருஷன் வேற கல்யாணம் பண்ணி இருந்தான். என் மாமியார் ஏற்கெனவே செத்துப் போச்சு போல. காதல் ன்னு என் வாழ்க்கையை அழிச்சிட்டு இப்போ ஆறு மாசத்துல இன்னோருத்தி. அதான் கோவத்தை அங்க காட்டிட்டேன். உன் தப்பா சொல்ல தான் வந்தேன். உன் கிட்ட வந்தத உன் பொண்ணு பாத்து தான் பயந்துட்டா. என் பையன் விளையாண்ட பந்து பாத்து உன் பையன் பயந்துட்டான். நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். உன் குடும்பம் நல்லா இருக்கட்டும். எனக்கு அண்ணன்னு சொன்ன. அந்த முறைக்கு ஒரு கோடித் துணி குடு. நான் போய்டுறேன்” என்று என் மகள் தரையில் அமர்ந்தாள்.

           ராவுத்தர் கண் காட்ட, அவசரமாக உள்ளே சென்றேன். அரசு வழங்கும் பொங்கல் புடவை புதிதாக இருக்க, எடுத்து வந்து கையில் கொடுத்தேன். அதை வாங்கி மேலே போர்த்திக் கொண்ட அடுத்த நொடி மயங்கி விழுந்தாள் என் மகள். பின்னாளில் அவள் கணவனும் புது மனைவியும் தூக்கில் தொங்கி இறந்த விஷயம் தெரிந்தது. அந்த வீடும் கைவிடப் பட்டது. அவளுக் கண்டு பயந்து விழுந்து குமரேசன் அண்ணா அடிபட்டுக் கொண்டதும் தெரிந்து கொண்டேன். பெண்களின் மேல் இன்னும் அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!