ஒரு நாள் போட்டி கதை: பெண்ணொன்று கண்டேன்

by admin 2
104 views

எழுதியவர்: சுஶ்ரீ

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு !

“அம்மா,சுசீ என் கருப்பு ஸ்வெட்டரைப் எங்கே வச்சே? நேத்து நைட்ல இருந்து தேடறேன் என் ஷெல்ஃப்ல காங்கலயே” அம்மா டிவி பாத்துட்டு ஹால்ல உக்காந்திருந்தவ, “என்னையாடா கேட்டே, காபி
போட்டுத் தரவா?” “இல்லைம்மா நான் சுசி கிட்ட பேசறேன்” “அதனால என்ன ப்ரூ காபி போட்டுத் தரேன்”
“கொஞ்சம் சும்மா இரும்மா சுசிலா கிட்ட பேசிட்டிருக்கேன் “ சைகையோட சொன்னப்பறம் அம்மா கொஞ்சம் அமைதியானாள்.
இது வெங்கட்ராமன் வீட்டில் காலை நேர வாக்குவாதம் அவர் மனைவி சுசி இப்ப,”அதை நேத்து நைட்டே கேக்க வேண்டியதுதானே,இப்ப கேக்கறீங்க”
“சரி அதனால என்ன இப்ப எனக்கே கிடைச்சிடும்னு நினைச்சேன்,தெரிஞ்சா சொல்லு”
“போன வருஷமே வெளில போயிடுச்சே அதான்” “என்னடி சொல்றே அதுவா எப்படி வெளில போகும்?”
“தெரியாத மாதிரி பேசுங்க, என் தம்பிக்கு நான்தான் எடுத்துக் கொடுத்தேன் எங்கயோ டில்லிப் பக்கம் டூர் போறதுக்கு முன்னால ஃபேமிலியோட வந்தானே,அப்ப அங்கேயெல்லாம் குளிரா இருக்கும் அவர்தான் யூஸ் பண்றதில்லை நீ எடுத்துட்டுப் போனு”
“நானும் ஶ்ரீதரும் நாளைக்கு திருப்பதி வரை பைக்ல போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம், குளிரா இருக்குமே என்ன பண்றது” “என்னது திருப்பதி போறீங்களா? உங்க பொண்ணு இன்னிக்கு நைட் கிளம்பி
காலங்காத்தால எக்மோர் வந்து நிப்பாளே, யாரு போயி கூட்டிட்டு வருவாங்க.?” “மறந்து போச்சுடி, சரி ஶ்ரீதர் கிட்ட சொல்லிடறேன் பிப்ரவரி முத வாரம் போகலாம்னு.”

வெங்கட்ராமன்,சுசிலா தம்பதிக்கு மாலதி ஒரே பொண்ணு.மதுரை எரஸ்கின் ஆஸ்பத்திரில வுஸ்சர்ஜனா போன வருஷம்தான் ஜாயின் பண்ணியிருக்கா.மெதுவா சென்னை பக்கம் மாத்த முயற்சி பண்ணணும்.
சுசிலா முனகிட்டே உள்ளே போனா,சரியான கஞ்சம்பட்டி இவர் கிட்ட சொல்லிட்டுதானே ஸ்வெட்டரைத் தூக்கி ஶ்ரீராமுக்கு கொடுத்தேன்,மறந்து போன மாதிரி நடிப்பு,இவர் எங்கே பணத்தை கொட்டிக் கொடுத்து பொண்ணுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கப் போறார், பாவம் குழந்தை மாசா மாசம் ஓடி வரா.
வெங்கட்ராமன் கஞ்சம்னு இல்லைஆனா எதையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சு செலவு பண்ணுவார். மாலதி எம்.பி.பி.எஸ் முடிச்சு சொந்தமா டிஸ்பென்சரி வைக்கலாமா, மேலே எம்.எஸ் படிக்கலாமா, இல்லை தனியார் ஆஸ்பத்திரில வேலைக்கு முயற்சி பண்ணலாமானு யோசிச்சிட்டிருந்தா.
வெங்கட்ராமன் தன் நெடுநாள் நண்பர் ஶ்ரீதரோட மெரினால மார்னிங் வாக் போறப்ப,எதேச்சையா மீட் பண்ணின ஶ்ரீதரோட தூரத்து உறவுக்காரர் மூலம் அதிர்ஷ்டக் காத்து மாலதிக்கு அடிச்சது. ஶ்ரீதர்,வெங்கட்ராமன்,அந்த புது நண்பர் கோபாலகிருஷ்ணன் மூணு பேரும் வாக்கிங் முடிச்சு, அருகம்புல் ஜூஸுடன் அந்த கான்கிரீட் பெஞ்ச்ல உக்காந்து பேசறப்ப, பேச்சு மெதுவே அவரவர் குடும்பத்தைப் பற்றி திரும்பி, மாலதி விஷயமும் பேச்சில் வந்தது.ஶ்ரீதரன்தான்,”ஏண்டா கோபு நீதான் செக்ரடேரியட்ல முக்கியமான புள்ளி ஆச்சே, ஏதாவது கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில இவன் பொண்ணு மாலதிக்கு ஒரு
போஸ்டிங் வாங்கிக் கொடேன்.”
“அவ்வளவு ஈசி இல்லை அது ஆனாலும் முயற்சி பண்ணலாம், ஃபோன் நம்பரை கொடுங்க வெங்கட் சார், ஒரு வாரத்துல முடியுமா முடியாதானு சொல்றேன்.கொஞ்சம் செலவானாலும் ஆகலாம்,பாப்போம்.” அவரோட கார்டையும் கொடுத்தார். அதுக்கப்பறம் நடந்ததுக்கெல்லாம் ஶ்ரீதரன்தான் முக்கிய சூத்ரதாரி.
பேருக்கு மெடிகல் கவுன்சில் நேர்காணல்,அது இதுனு முடிஞ்சு மதுரை பெரியாஸ்பத்திரில போஸ்டிங்னு லெட்டர் கிடைச்சது.செலவு ஒண்ணும் பெரிசா ஆகலை.
ஆஸ்பத்திரிக்கு பக்கத்துலயே,சாத்தமங்கலம்,பாண்டியன் நகர் ஒர்கிங் உமன் ஹாஸ்டல்ல இடம் பாத்து செட்டில் பண்ணிட்டு வந்தாச்சு.முதல்ல மாலதிக்கு கஷ்டமாதான் இருந்தது.இப்ப பழகிப் போச்சு, ஏன் மதுரை பிடிச்சுப் போச்சுனே சொல்லலாம்.
மதுரை ஏன் பிடிச்சது? கோரிப்பாளையம் அலங்கார் ஹோட்டல் ஓனரோட பையன்
சதீஷ்தான் காரணமான்ற பிரச்சனையை அப்பறம் வச்சிக்கலாம். மாலதிக்கு முதல்ல மதுரைல தனியாப் போய் அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரில வேலை பாக்க,தனியா ஒரு வீட்ல இருக்க ரொம்ப பயமாதான் இருந்தது. எப்படா வீக்லி ஆஃப் வரும்,சேந்தாப்பல ரெண்டு மூணு நாள் லீவு வரும்னு காத்திருந்து சென்னைக்கு ஓடுவா. ஒரு 4 மாசத்துக்குள்ளயே மதுரை பழகிப் போச்சு.இப்ப ஆஸ்பத்திரியும் பழகிப்
போச்சு,வேலைலயும் பயம் போய் ஒரு பிடிப்பு வந்துடுச்சு. சென்னைக்கு அடிக்கடி ஓடற பழக்கம் குறைஞ்சது.இதெல்லாம் தவிர இந்த வயசுக்கே உரிய சின்ன திருட்டுத் தனமும் மதுரை பிடிச்சுப் போனதுக்கு காரணம். பொதுவா ஹாஸ்டல் மெஸ்ல சாப்டுட்டு,லன்ச் பேக் பண்ணி எடுத்துட்டு வந்துடறதுதான் பழக்கம். நைட் டிஃபன் நேரத்துக்கு ஹாஸ்டல் திரும்பிடலாம்.மாலதியோட மெடர்னிடி
வார்டு தலைமை டாக்டர், மாலதி புதுசுன்றதால தற்காலிகமா நைட் ஷிஃப்ட்ல எல்லாம் போடறதில்லை.
அந்த மாசம் வார்ட்ல நிறைய பேஷன்ட்,பல டாக்டர்கள் விடுமுறைல போயிட்டதால மாலதிக்கு வேலை பளு அதிகமாச்சு.நேரத்துக்கு ஹாஸ்டல் போக முடியலை. ஆஸ்பத்திரிலயே கிடைச்ச நேரத்துல தூக்கம், ஓய்வு, ஆஸ்பத்திரி கேன்டீன்ல சாப்பிடப் பிடிக்காம இவளும் கூட வேலை பாத்த இன்னும் சிலருமாக வெளில பக்கத்துல இருந்த அலங்கார் ஹோட்டலுக்கு போவார்கள். அங்கே இருந்த குளிர்சாதன அறையில் கலகலப்பாக அன்று ஆஸ்பத்திரியில் நடந்த விஷயங்களை பேசிக் கொண்டே உணவு வகைகளை ருசிப்பது அவர்கள் வழக்கம்.கல்லாவிலிருந்து முதலாளியின் பையன் தானே எழுந்து வந்து குளிர்சாதன அறையில் உணவருந்தும் வாடிக்கையாளர்களை உபசரிப்பது வழக்கம்.அன்றைய மாலைப் பொழுது உள்ளே வந்த அவன்,”என்ன மருத்துவக் குழுவே இன்றைய ஸ்பெஷல் பட்டர் அடை, அவியல் ஆர்டர் பண்ணலையா? சூப்பரா இருக்கும் அஞ்சு பேருக்கும் சொல்லவா?” மாலதி,”ஐய்யே எனக்கு வேண்டாம்பா, அடைன்னாலே பிடிக்காது,முருகலா தோசை ஓகே” இப்பதான் சதீஷ் மாலதியை சரியா பாத்தான்,”டாக்டர் மேடம் இது எனக்கு சேலன்ஜ் மாதிரி ஆயிடுச்சு, நானே போய் ஸ்பெஷல் அடை பண்ணி எடுத்துட்டு வரேன்,பிடிக்கலைன்னா பில்லுல அதை சேக்கலை” சொல்லிட்டே உள்ளே
போயிட்டான். மாலதி,”என்னடி உஷா இது கட்டாயத் திணிப்பு,எனக்குப் பிடிக்காதுன்னா விடாம, இதுல
என்ன சேலன்ஜ்.” “இல்லைடி மாலு இங்கே அடை அவியல் நிஜமாவே நல்லா இருக்கும்.”மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். “இதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட்,அடை பிடிக்காதுன்னா விட வேண்டியதுதானே” பத்தே நிமிஷத்துல அந்த சதீஷ் ரெண்டு சப்ளையர்கள் சகிதம் அந்த ஐவருக்கும் சுடச்சுட அடை அழகாக ஒரு தட்டில் வாழை இலை மேல் வைத்து கிண்ணத்தில் அவியலுடன்
பறிமாறினான்.மாலதியைப் பாத்து,”டாக்டர் மேடம்,எங்க அடையை சாப்பிட்டுப் பாருங்க,வெள்ளிக் கிழமை ஸ்பெஷல் இந்த டிஷ்.,மத்த நாட்கள்ல கிடைக்காது.”
மாலதி தயக்கத்துடன் செக்கச் சிவந்து முருகலாய் வெண்ணை மேலே லேசாக உருக கவர்ச்சியாய் காத்திருந்த அடையை கொஞ்சமாக ஒரு விள்ளல் எடுத்தாள். நாசூக்காய் வாயில் போட்டவுடன்,சுவையாய் கரைந்தது.அடுத்த விள்ளல் தாராளமாய் அவியலுடன் சேத்து.ரெண்டு மூணு வாய் சாப்பிட்டவுடன்தான் தன்னையே பாரத்துக் கொண்டு நிற்கும் அந்த வாலிபனை வனித்தாள்.எதிரே ஒருத்தர் தன்னையே கவனிக்கும் போது சாப்பிட சங்கோஜமா இருந்தது. அவனுக்கும் சாப்பிடுபவர்களை கண் கொட்டாமல் பார்ப்பது,அதுவும் அந்த அழகிய பெண்ணைப் பார்த்துக் கொண்டே நின்றது சட்னு தவறாகப் பட்டது.”சாரி மேடம் நீங்க நிதானமா சாப்பிடுங்க,இந்த பிளேட் என் தரப்பில் காம்ளிமென்ட்”
“அச்சோ அதெல்லாம் வேண்டாம்,என் பாட்டி தடியா அடை பண்ணுவா,அதோட தொட்டுக்க வெல்லம்தான். எனக்கு பிடிக்கவே பிடிக்காது.இப்படி முருகலா நெய் வாசனையோட இப்பதான் சாப்பிடறேன். ரியலி டிவைன் டேஸ்ட். இனிமே இதுக்காகவே வெள்ளிக் கிழமை தவறாம வரணும்.” சொல்லி விட்டு சிரித்தாள் மாலதி. அந்த இளைஞன் ஒரு புன்னகையுடன், தன் இல்லாத மீசையை முறுக்கின வண்ணம் தன் இடத்துக்கு விரைந்தான்.
அதுதான் தொடக்கமோ! புதன் கிழமை இடியாப்பம்,சொதி ஸ்பெஷல், திங்கக் கிழமை
செட் தோசை வடகறி ஸ்பெஷல்,ஞாயித்துக் கிழமை காலைல வெண் பொங்கல்,கத்திரிக்காய் கொத்சுனு தினம் சந்திப்பு தொடர்ந்தது. இரண்டே மாசத்துல காதலா மலர்ந்தது. மாலதி சென்னை டிரிப் குறைஞ்சது. பொண்ணு வந்து ரொம்ப நாளாச்சேனு வெங்கட்ராமன் தானே ஒரு முறை மதுரை புறப்பட்டு வந்தார்.
“வேலை நிறைய அப்பா, அதான் இப்பல்லாம் முன்னே மாதிரி அடிக்கடி வர முடியறதில்லை”
“புரிஞ்சதம்மா, கோபாலகிருஷ்ணன் சாரைதான் திரும்ப பிடிக்கணும் சென்னைக்கு மாறுதல் வாங்க”
“அச்சோ அதெல்லாம் வேண்டாம்,இங்கே நல்ல சீனியர் டாக்டர்ஸ் இருக்காங்க,நல்ல பிராக்டீஸ் கிடைக்கிறது,அப்பறம் பாத்துக்கலாம்” “அப்படியா சொல்றே” “ஆமாம்,சரி வாங்க, இங்கே ஒரு சூப்பரான ரெஸ்டாரன்ட் இருக்கு போகலாம் பசிக்குது” அந்த ரெஸ்டாரன்ட்ல தன் பெண்ணுக்கு கிடைச்ச மரியாதை,உபசாரம் பாத்து வெங்கட்ராமன் அசந்து போய் விட்டார்.முதலாளி பையனே வந்து தன்னை
உபசரித்ததைப் பார்த்து,”மதுரைக்காரங்க ரொம்ப பாசக்காரங்கனு” இருக்கற பேச்சு உண்மைதான் போலனு நம்பினார். ஆனால் பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தப்ப அந்த இளைஞன் மாலதியைப் பாத்து புன்னகையுடன் லேசாக கை அசைத்ததும்,தன் பெண்ணின் சந்தோஷப் புன்னகையும்
லேசாக சந்தேகத்தை கிளப்பியது. ஆனால் மாலதியை ஒண்ணும் கேக்கலை,வீண் சந்தேகம் என தன்னையே கடிந்து கொண்டார். இதெல்லாம் பழைய கதை இப்ப என்ன ஆச்சுனு பாப்போம்.
திருப்பதி டிரிப் கேன்சல், பொண்ணு நாளைக்கு காலைல வரா எக்மோர் போய் கூட்டிட்டு வரணும்னு சுசிலா உத்தரவு போட்டாச்சு. இதை ஶ்ரீதரனுக்கு ஃபோன் பண்ணி சொன்னா,ஶ்ரீதரன் ஆமாண்டா அதுவும் நல்லதுதான், திருப்பதில ஒரே கூட்டமாம், ஐய்யப்ப பக்தர்கள் நிறைய கூடியிருக்காங்களாம்,பிப்ரவரில போகலாம்”ன்றான். மாலதிப் பொண்ணு கிட்டத்தட்ட 4,5 மாசத்துக்கு அப்பறம் நாளைக்கு சென்னை வரா.
சுசிலா நேத்துல இருந்தே தேங்குழல்,முறுக்கு, அதிரசம்னு தடபுடல் பண்ணிட்டிருக்கா. அம்மா வேற,”என்னடி நாளைக்கு தீபாவளியா,மருந்து கிளறியாச்சா, எனக்கு புதுப் புடவைல்லாம் வேணாம் இந்த மேக்சியோ என்னவோ சொல்றாளே அது நீலத்துல ஒண்ணு, மஞ்சள்ல ஒண்ணு வாங்குங்க போதும். புடவைல்லாம் கட்டிக்க கஷ்டமா இருக்கு அவர் இருந்தப்ப தீபாவளின்னா எப்படி இருக்கும்.குழந்தை மாதிரி பட்டாஸ்,துணிமணினு வாங்கி குவிச்சிடுவார்” இல்லாத கணவரை நினைத்து பனிச்ச கண்களை புடவைத் தலைப்புல துடைச்சிண்டா.
வெங்கட்ராமன்,”தீபாவளி எப்பவோ போயாச்சு,நீ கூட கம்பி மத்தாப்பு கைல பிடிச்சு சுத்தினயே,நீ கேட்ட மேக்சி ரெண்டு இல்ல மூணு தொட்டுக் கூட பாக்காம பீரோல தூங்கறது. இப்ப பொங்கல் வரது,உன் பேத்தி மதுரைல இருந்து வரப் போறா” “ஆமாண்டா,தீபாவளின்னா பட்டாசு சத்தம் கேக்கதான் செய்யும், நீ போய் முதல்ல எண்ணை தேச்சு குளிச்சிட்டு வா”
“சுசிலா காசு போனா போறதுனு,அம்மாக்கு ஹியரிங் எய்டு மாட்டி விடணும்டி, தாங்க முடியலை”
“காது மட்டும்னா பரவாயில்லை எல்லாமே அவுட், சரி சரி சீக்கிரம் சாப்டுட்டு தூங்குங்க காத்தாலை சீக்கிரம் எழுந்து எக்மோருக்கு ஓடணும்”
ஏதேதோ யோசனைகள்ல வெங்கட்ராமனுக்கு ரொம்ப நேரம் தூக்கம் வரலை.ஒரு 3 மணி போல இருக்கும் பிடிவாதமா அந்த மொபைல் ஃபோன் அலறியது, இந்த வேளைல யாருனு ஃபோனை எடுத்தார். ‘ஹலோ வெங்கட்ராமன்? பயப்படாதீங்க நான் விழுப்புரம் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில இருந்து இன்ஸ்பெக்டர் பேசறேன்,நீங்க உடனே புறப்பட்டு வாங்க, உங்க பொண்ணுக்கு சின்ன ஆக்சிடன்ட்” பதறிப் போனார் வெங்கட்ராமன்,சுசிலாவை எழுப்பி,’சுசிலா கொஞ்சம் விழுப்புரம் வரை போயிட்டு வரேன், மாலுவுக்கு ஏதோ சின்ன ஆக்சிடென்டாம்” அவருக்கு மேல் பதறின சுசிலா,”காரை எடுங்க,நீங்க தனியா போக வேண்டாம், நானும் வருவேன்”
“அம்மா தனியா இருப்பாளே”
“எதுத்த வீட்டு கோமளி கிட்ட சொல்றேன் கூட வந்து படுத்துப்பா”
அவர்கள் விழுப்புரம் பெரிய ஆஸ்பத்திரியை அடைந்த போது நன்றாகவே விடிந்து விட்டது. இன்ஸ்பெக்டர் திரவியம் ரிசப்ஷன் சோஃபால அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்தார். இவர்கள் அணுகியதும், ”சாரி,உங்க பொண்ணு விழுப்புரம் ஸ்டேஷன்ல ரயில்ல இருந்து கீழே விழுந்துட்டாங்க.உடனே தூக்கிக் கொண்டு வந்து அட்மிட் பண்ணியாச்சு.அவங்க பேக்ல இருந்த ஃபோன்,சில பேப்பரை வச்சு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணினோம்.” வெங்கட்ராமன்,”இப்ப போய் உடனே பாக்கணுமே” “இதோ டாக்டரே வரார் கேளுங்க” பரபரப்பாய் வெளில வந்த டாக்டரிடம்,”நாங்க எங்க பொண்ணை போய் பாக்கலாமா” “இல்லை ஐ.சி.யூ. ல இருந்து ஆபரேஷன் தியேட்டருக்கு ஷிஃப்ட் பண்றோம். பொண்ணு நாலு மாசம் பிரெக்னன்ட்ன்றதால காம்பிளிகேஷன்ஸ் ஜாஸ்தி.” சொல்லிட்டே வேகமா நடந்துட்டார்.

வெங்கட்ராமனுக்கும்,சுசிலாவுக்கும் பெரிய ஷாக். இந்த அளவு கவனிக்காம விட்டுட்டோமே.அந்தந்த வயசுல கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு அம்மா அடிக்கடி சொன்னது எவ்வளவு உண்மை.அந்த ஹோட்டல்காரப் பையனாதான் இருக்கணும்.பாவி,சிரிச்சு சிரிச்சு குடியை கெடுத்துட்டானே.
நேரம் போச்சு,நேரம் போயிட்டே இருக்கு. அன்ன ஆகாரம் இல்லாம வெங்கட்ராமனும்,சுசிலாவும் அந்த ஆஸ்பத்திரி இருக்கைகள்ல.சாயந்தரம் போல அந்த வார்டு பாய் கிட்ட கேட்டார் வெங்கட்ராமன். “என்ன ஆச்சு அந்த பொண்ணுக்குனு” ஒரு 500 ரூபா நோட்டு கை மாறியவுடன்,”அனேகமா போயிடுச்சு, சும்மாவாச்சும் வென்டிலேட்டர்ல கிடக்கு,செத்துப் போன பொண்ணுக்கு நீங்க தினம் பூரா இங்கே
கிடக்கீக” அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் கணவனும் மனைவியும்.சாவகாசமாக வந்த
டாக்டர்,”போய்ப் பாருங்கம்மா,எவ்வளவோ முயற்சி பண்ணினோம் காப்பாத்த முடியலை”
மாலுனு அலறிய வண்ணம் அந்த குளிரூட்டப்பட்ட அறை நோக்கி பாய்ந்தாள் சுசிலா வெங்கட்ராமன் பின் தொடர்ந்தார். அந்த படுக்கையின் அருகில் இருந்த நர்ஸ் பாருங்கனு அந்த வெண் போர்வையை விலக்கினாள். கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட “மாலு எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டயேடினு” அருகில் போன சுசிலா அதிர்ந்து போனாள்.”இது எங்க மாலு இல்லை”
வெங்கட்ராமன்,”சுசீ சமாளிச்சிக்கோ, என்ன பண்றது நம்ம விதி குழந்தை போய் சேந்துட்டா”னு அருகில் போன வெங்கட்ராமனும் தன்னை மறந்து, “இது எங்க மாலதி இல்லவே இல்லை”னு உரக்க கத்தினார்.
இவர்கள் சத்தத்தைக் கேட்டு உள்ளே வந்த இன்ஸ்பெக்டர்,”முகமெல்லாம் டேமேஜ் ஆகலையே நல்லாதானே இருக்கு” சுசிலாவின் அழுகை கட்டுக்கடங்கலை, வெங்கட்ராமன்,”சார் இது எங்க பொண்ணே இல்லை”
நைட் வீட்டுக்கு கார்ல திரும்ப வந்தப்ப,உள்ளே இருந்து மாலதி “அம்மா”னு ஓடி வந்தா.விவரம் தெரிஞ்சு விழுந்து விழுந்து சிரிக்கறா. திண்டுக்கல்ல ஏறின ஒரு பொண்ணு நான் தூங்கறப்ப என்னோட ஃபோன் உட்பட எல்லாத்தையும் தூக்கிட்டு இறங்கிட்டா.
பாவம் கீழே விழுந்துட்டா போல இருக்கு.மாம்பலம் வந்தவுடனே முழிச்சுப் பாத்தா எல்லாம் காலி. சரி போகட்டும் எல்லாம் புதுசா கிடைக்கும்னு சந்தோஷமா வீட்டுக்கு வந்தா நீங்க காணோம்”
“சரியான ஆளுடி, சாமான்களை பத்திரமா வச்சிக்கத் தெரியாதா?
மாலதி,”காலா காலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா பொய் பொய்யா பொண்ணு பிரக்ன்ன்ட்னு நினைக்காம நிஜமாவே அப்படி ஆயிருக்கும் இல்லையா”
“போடி வெக்கம் கெட்டவளே,அப்பா,அம்மா முன்னால பேசற பேச்சைப் பாரு” வெங்கட்ராமன்,”என்னம்மா அந்த ஹோட்டல்காரப் பையன் நல்லா இருக்கானா?”
“போங்கப்பா, சதீஷ்னு சொல்லுங்க,அவர் அம்மா அப்பாவோட உங்களைப் பாக்க வெள்ளிக்கிழமையன்னிக்கு வரார்” சொல்லும் போதே மாலுவுக்கு கன்னம் குங்குமம் ஆனது.
சுசிலா,”அட திருட்டுக்கொட்டுகளா, எனக்குத் தெரியாம வீட்ல இத்தனை நடக்குதா? நான்தான் லூஸு மாதிரி ஒரு நாள் பூரா யாரோ ஒரு மரணித்த கர்ப்பிணியோட அழுதுண்டு உக்காந்திருந்தேனா”
அம்மா,”என்னடா கும்மாளம் ஊரைத் தூக்கறது?யாரு பிள்ளையாண்டிருக்கா”

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!