காதல் பேசும் பிப்ரவரி: காதலின் தீபம் ஒன்று

by admin 2
53 views

எழுதியவர்: நா.பா.மீரா

ஏய் சம்யு …உன் மனசுல என்னடி நெ னைச்சிட்டிருக்கே …ஏதோ அரிசனப் பசங்களுக்காக வேலை பார்க்கப்போறேன் ..அது இதுன்னு.. கதை விட்டுட்டு எவனோ ஒருத்தனோட சுத்திக்கிட்டிருக்கியாமே…..

உன் நெலைமைக்கு காதல் ஒண்ணுதான் குறைச்சல் …நீ இன்னும் வயசுக்கே வரலைன்னு தெரிஞ்சா … அவன் உன்னைச் சீந்தக்கூட மாட்டான் ….ஏளனமாகப் பேசிய தந்தையின் வார்த்தைகள் அவளுக்குப் பழகிவிட்ட ஒன்றுதான். 

தந்தையுடன் போராடியே இறந்து போன தாயின் நினைவில் கண்கள் பனிக்கின்றன சம்யுக்தாவிற்கு.

அளவுக்கதிகமான புகைப்பழக்கத்தினால் கான்சர் முற்றிய நிலை ..மரணத்தின் வாயிலில் கூட அன்பு துளியும் எட்டிப்பார்க்காத அப்பாவின் குணம் எண்ணி அவள் வேதனை கூடப்படுவதில்லை.

தாழ்ந்த குடியாகச் சபிக்கப்பட்டு ஒதுக்கிய குழந்தைகளுக்கு சேவை செய்ய ஒரு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த இறைவனுக்குக் காணிக்கையாக …தன்  உயிர் இந்த பூமியில் விழக் காரணமானவருக்குச் செய்யும்  நன்றி எனக் கருதியே பணிவிடைகள் செய்தாள்.

படுகர் மற்றும் இருளர் இனக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்ததே தன் வாழ்வின் அர்த்தமுள்ள தருணங்கள் என்று மனம் கவலையில் வாடும்போதேல்லாம் அமைதி கொள்வாள் சம்யுக்தா.

கடவுளின் தேசமாகிய கேரள மலைப்பகுதியில் ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டிருந்த அந்தப் பள்ளியில் ஆண்களும், பெண்களுமாக மொத்தம் இருபது பிள்ளைகள் படிக்கின்றனர். 

மலைப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த நகரத்தின் என்.ஜி .ஓ . ஒன்றுதான்  பள்ளியை எடுத்து நடத்துகிறது. சம்யுக்தாவை வேலைக்கு அமர்த்தி மொத்தப் பொறுப்பையும் ஒப்படைத்திருந்தனர். 

இவர் பேரு நரேன் . நம்ம பசங்களுக்கு சிலம்பப் பயிற்சியும் , சில விளையாட்டுப் பயிற்சிகளும் சொல்லித் தரதுக்காக நியமிக்கிறோம் .நீதான் குழந்தைகளோட அவரைப் பழக வைச்சுப் பார்த்துக்கணும் . அந்த அமைப்பின் தாளாளர் சொல்லத் தலையசைத்தாள் சம்யுக்தா.

வணக்கம் நரேன் சார் .. குழந்தைகளுக்கும் , நரேனுக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தாள். 

நரேன் குழந்தைகளுக்கு சிறப்பாகப் பயிற்சிகள் கொடுத்ததோடு அவர்களோடும், சம்யுக்தாவோடும் நெருங்கிய  தோழமை உணர்வோடு பழகினான்.

அந்தப் பள்ளியில் நரேன் வந்து சேர்ந்து ஒரு வருடம் ஓடியதே தெரியவில்லை. 

ஒரே பள்ளியில் இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள சூழ்நிலையில் நெருங்கிப் பழகுவது சகஜம்தானே .. அதுவும் நரேன் எவ்வளவு கண்ணியமானவர் .

சில நாட்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில், சம்யு ..எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு . ஓரளவுக்கு உங்க வீட்டு சூழ்நிலை தெரியும் …நா உங்கப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்கவா …

கல்யாணமா …எனக்கா ..ஊம் அதெல்லாம் ஒத்துவராது நரேன் .நாம எப்பவும் நல்ல நண்பர்களா மட்டும் இருப்போமே ப்ளீஸ் …பட படவென்று பேசிவிட்டு சற்றும் தாமதிக்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டாள்.

ஏன் கல்யாணம்னா ஒதுங்கறா …இவளுக்கு நம்மள ரொம்பப் பிடிச் சிருக்குங்கறது அவளோட ஒவ்வொரு அசைவிலயும் தெரியுது ..

அன்று அவள் தந்தையைச் சந்தித்துப் பேசிவிடுவது என்ற முடிவோடு அவள் வீடு சென்றவனை ….வாயிலிலேயே நிறுத்தியது மட்டுமல்லாமல் முற்றிலும் திகைக்க வைத்தன அனுமதியில்லாமல் அவன் காதில் விழுந்து வைத்த சம்யுக்தாவின் தந்தையின் நாராச வசனங்கள் .

ஓ ..இதனால்தான் கல்யாணம் வேணாம்னாளா….வந்த சுவடே தெரியாமல் திரும்பிவிட்டான் நரேன். 

மறுநாள் பள்ளியில்…

அவரவர் உலகத்தில் சுருண்டிருந்த நரேனும், சம்யுக்தாவும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. 

மாலை பள்ளி முடிந்து கிளம்பும்போது …எனக்கு வேற ஒரு பள்ளிக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க …நாளையிலிருந்து நா வரமாட்டேன் …மிஸ்.சம்யுக்தா ..அவள் முகம் பார்க்காமலே பேசினான் நரேன்.

சம்யு …மிஸ்.சம்யுக்தாவானதை அந்தக் கடின நொடியிலும் மனத்தில் குறித்துக்கொண்டவள் ….

என்ன திடீர்னு …..

நேரிடையாக, நேத்து சாயங்காலம் நா உங்க வீட்டுக்கு வந்திருந்தேன் …என்று இழுத்தவனின் பதிலில் அவளது எல்லாச் சந்தேகங்களுக்குமான விடையும் கிடைத்துவிட்டது. 

ஓ ..ஆல் த பெஸ்ட் , தாங்க்யூ சோ மச், மாணவர்களுடன் இணைந்து முறைப்படி நன்றி கூறி வழியனுப்பி வைத்தாள்.

கடைசில அப்பா சொன்னது கரெக்டுதான்னு நிரூபிச்சிட்டாரே நரேன் . அவன் காதல் சொன்ன தருணத்தில் நட்பைத் தாண்டி மொட்டுவிட எத்தனித்த காதல் செடி துளிர்க்காமலேயே வாடியது. அன்று அவள் படுக்கை கண்ணீரால் நனைந்தது.

முப்பது நாட்கள் ஆயிற்று ….நரேன் சென்று. ஒரு வழியாகத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு நடமாட ஆரம்பித்துவிட்டாள் சம்யுக்தா. 

நோயின் கோரப் பிடியில் இருந்த தந்தை சில மாதங்களில் இறக்க …முறைப்படி காரியங்கள் செய்து அவரை வழியனுப்பி வைத்தாள். 

வீட்டைக் காலி செய்து நிர்வாகத்தின் அனுமதியுடன் பள்ளியில் கட்டப்பட்டிருந்த கெஸ்ட்ஹவுசுக்குக் குடிபெயர்ந்தவள் …. மாணவர்களோடு அதிகநேரம் செலவழித்து வாழ்க்கையை ஓட்டினாள்.

ஓட்டினாள் என்றுதான் சொல்லவேண்டும். இருபத்தி ஐந்தே வயது நிரம்பிய சம்யக்தாவிற்கு எல்லாப் பெண்களையும் போல் தன் வாழ்க்கை இல்லையே என்ற எண்ணக் குமிழிகள் கொப்பளித்து மேலெழும்போதெல்லாம் …குமிழியின் ஊடே வந்து மறையும் முப்பது வயது நரேனின் உருவத்தை எவ்வளவு பிரயத்தனம் செய்தும் விலக்கி வைக்கவோ தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.

அன்று…

பள்ளிக்குக் கிளம்புமுன் விளக்கேற்றி விழிகள் மூடி இறைவனைப் பிரார்த்தித்து முடித்து இமைகளை மெதுவே பிரிக்க …எதிரே நரேன் ….சே…எப்பொழுதும் அவரையே நினைக்கறதால வந்த பிரமைதான் …என்று எண்ணியவளை …

எப்படியிருக்கே சம்யு …என்ற தெளிவான குரல் உயிர்வரை உருக்கியது. 

நரேன் …நீங்க…நீங்க…தடுமாறியவளைக் கையமர்த்தி … உன்னோட நரேன்தான்…. உன் அப்பாகிட்டேயிருந்து உனக்கு மறுக்கப்பட்ட அன்பை பரிபூரணமாத் தர்றதுக்காக வந்திருக்கேன் … என்னை ஏத்துப்பியா?

ஆனா… நீங்க அன்னைக்கு… சம்யுக்தா என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தவனின் நினைவலைகள்  சற்றே பின்னோக்கி அடித்துச் செல்லப்பட்டன .

ஒரு பெண் உரிய வயதில் பூப்பெய்தாதது இயற்கையின் குற்றம்தானே ..எப்படி அவள் மீது பழி போட முடியும் ….சுயநலத்தின் மொத்த உருவாய் இருந்த அவள் தந்தையின் மீது அன்று அவனுக்குக் கோபம் கொப்பளித்தது …

அந்த சூழ்நிலையில் ஒன்றுமே செய்யமுடியாமல் கையறு நிலையில் திரும்பினாலும் மனதில் சில திட்டங்கள் தீட்டினான்.

சம்யுக்தாவின் உலுக்கலில் தன்னிலைக்கு மீண்ட நரேன்…சம்யு ப்ளீஸ் பழசு வேணாமே … ஆனாலும் உன் மண்டையக் குடையற சில கேள்விகளுக்கு விளக்கம் தரணும்தானே …

உன்னைப்பத்தித் தெரிஞ்ச விஷயத்தினால என் காதல் கூடிச்சே தவிர குறையல ..ஆனா நீ எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம என் மேல் உள்ள உன் காதலை உணரணும்கிறதுக்காகத்தான் இந்த நீண்ட இடைவெளி …..விளக்கம் போதுமா சம்யும்மா …என்றவனை அணைத்தவளின் பெண்மை முதன்முதலாக அந்த ஆணின் ஸ்பரிசத்தில் சத்தமின்றி மலர்ந்தது.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!