எழுதியவர்: அனுஷாடேவிட்
பழமொழி: அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்
இளங்கன்று பயமறியாது.
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
குடி குடியைக் கெடுக்கும்.
அர்த்தம்:
துணிந்து செயல்படு – நினைத்ததை அடைய சபையில் துணிந்து செயல்பட்டு அச்சமின்றி உயர்ந்த நிலையை அடைவான்.
வாலிபத்துணிவு – மழலைக்கு ஓடும் நாகமும் விளையாட்டு பொருளே, பின்விளைவுகளையும் அதன் வீரியத்தையும் அறியாமல் அதைப்பிடித்து விளையாட தான் நினைக்குமே அன்றி பயம் கொள்ளாது.
அழியாத வரம் – பச்சை மரத்தில் ஆணி அடிப்பது, கல்வெட்டில் ஓவியம் வரைந்து உளிக்கொண்டு செதுக்குவது போல வாலிபத்தில் பயிலும் கல்வி அழியாத வரமாக நிலைக்கும்.
அழிவின் ஆதாரம் – மதுவெனும் அரக்கன் உள்நுழைய தன் இயல்பு சுயமரியாதை நற்பெயர் குடும்பம் அனைத்தையும் தொலைத்து தானும் மடிவர்.
பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிய பதின்ம வயதுச் சிறுமி கீர்த்தனா முதல் தரவரிசையில் தேர்ச்சிப் பெற்றிருந்தும் தன் தந்தையிடம் பயந்து பயந்து வந்து மதிப்பெண் தரஅட்டையை நீட்டினாள்.
“அப்பா ரேங்கார்ட்ல சைன் பண்ணுங்க” கையெழுத்திட்டதும் தன் உந்துருளியில் பள்ளிச் சென்றவளைக் கனிவுடன் பார்த்து நின்றிருந்தார் அன்னை அமராவதி.
கீர்த்தனா வறுமையிலும் படிப்பு ஒன்றே தாரக மந்திரம் என்று எப்பொழுதும் படித்துக் கொண்டேயிருப்பாள். விளையாட்டுகளிலும், எழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளிலும் கூட முழுப் பங்களிப்பையும் தந்துப் பள்ளியில் முதலாமிடத்தில் இருப்பவள். எப்பொழுதும் புன்னகையுடனே தோழியர்களுக்கு சொல்லிக் கொடுத்திடுவாள். வீட்டிலோ நேர்மாறாக இருப்பாள்.
எந்நேரத்தில் தந்தை வீட்டுக்கு வருவாரோ?
என்ன செய்வாரோ?
படிக்க விடுவாரோ?
சண்டையிடுவாரோ? என்று பயந்து இருப்பாள்.
அன்றைய தினத்திற்கு முன்தினம் காலையிலேயே காதில் கேட்கக்கூடாத வார்த்தையெல்லாம் கேட்டவண்ணமே எழுந்தாள்.
“யோவ் ராசைய்யா… ரோஷம் கெட்டவனே… வாங்குன காசுக்கு வட்டி குட்டி போட்டு அசல்ல மிஞ்சுது. இன்னும் தராமல் பொஞ்சாதி முந்தில ஒளிஞ்சிருக்கியோ *** ஒழுங்கா அசல்ல எடுத்து வையும் இல்லியா உன் பொஞ்சாதியை அனுப்பி வையும்”
வீட்டின் வாசலில் நெடுநெடு உயரத்தில் ஒருவன் நின்று வசைப்பாடிக்கொண்டிருந்தான் வட்டிப்பணத்தைச் செலுத்தும்படி.
“எப்பா பொட்டப்புள்ள இருக்கும் வீடு பாத்து பேசும். எம்புட்டு காசுனு சொல்லும் நான் தரச்சொல்லுதேன் போவும் நீரு” அக்கம்பக்கத்தினர் பேசி சமாளித்து அனுப்பி விட்டனர். அடுத்த நொடி அந்தச் சம்பவம் அரங்கேறியது.
தன் கண்முன்னே மதம் முற்றியவனாய் அன்னையின் நீண்டக் கருங்குழலை சுற்றியிழுத்து அடித்து சுவற்றில் தள்ளியவர் மனைவி அழும் குரலிற்கெல்லாம் செவிமடுக்காமல் கந்தரத்திலிருந்த தாலிச்சங்கலியை அத்தெடுத்தவர் வீட்டை விட்டு வெளியேறினார். செய்வதறியாது பார்த்திருந்தவள் தகப்பன் வெளியேறிய நொடி ஓடோடி வந்து தாயை அணைத்தபடி அழுதவள் “ஏன்மா அப்பா இப்படி இருகாவ்வ? வாமா நாம வேறெங்காது போய்டுவோம் தெனமும் இப்படி அடிவாங்கி சாவுததுக்கு வெளியே வேலை செய்து பொழைக்கலாம்”
“புருஷன் இருக்கும் போதே வாழவிடமாட்டானுகடி தனியே போனா சீரழிச்சிடுவானுக பொண்ண பொறந்தா பொறுமையா இருந்துதான் ஆவனும்” தாய் உரைத்ததைக் கேட்டவள் அழுதபடி அன்னையைக் கட்டிக்கொண்டாள்.
“கட்”
இயக்குநர் சொன்ன அடுத்தநொடி ஸ்விட்ச் போட்டது போல் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
காட்சிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பகுதியும் அவரே எழுதியது தான். ஒவ்வொருவரும் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று தானே நடித்து காட்டி ரசனையோடு படம் பிடிக்கும் முப்பதுகளின்
மத்தியிலிருக்கும் இளம் பெண் இயக்குநர் இழையினி. இவைக் காட்சிகளே அல்ல தனக்கு நடந்தது என்று அவளையன்றி யாரரிவார்?
எழுந்தவள் அடுத்தக் காட்சிக்காக ஆயத்தங்களை செய்யச் சொல்லி கேரவனிற்குள் தஞ்சம் புகுந்து கண்ணாடிச் சாளரத்தின் வழியே, போடப்பட்டிருந்த சினிமா செட்டை ரசித்திருந்தாள்.
90களின் கிராமத்தில் செந்நிற ஓடுகள் வேய்ந்த சிறுசிறு ஓட்டு வீடுகளும் தென்னை ஓலையில் வேய்ந்த குடிசை வீடுகளும் சற்றே தள்ளி பள்ளிக்கூடமும் அதற்கேற்றார் போல அமைப்புகளுமென பிரமாண்டமான சினிமா செட் அது.
காட்சிகளைச் சரிப்பார்த்தவள் தான் மட்டும் இன்னமும் காட்சிக்குள்ளே இருக்கும் உணர்வுடன் சோர்ந்து போய் இருக்கையில் தளர்வாக சாய்ந்தமர்ந்து இமைகளை மூடினாள். அலைபேசி இசைக்க நயனங்களை நிமிர்த்தியவள் அழைப்பை ஏற்றுப் பேசினாள்.
“மேடம் நீங்க சொன்ன சந்தியான்ற பொண்ணு வேற ஏரியா மாறிட்டாங்க. ஸ்கூல் முடிச்சிட்டா. அப்பா குடிகாரன். அம்மா சித்தாள் வேலைக்கு போறாங்க. போன வாரத்தில் குடிக்கக் காசு கேட்டு அந்த அம்மாவை நல்லா அடிச்சு போட்டுட்டான் போல…..”
அழைப்புக்கு அந்தப் பக்கம் இன்னும் பேசிக்கொண்டிருக்க அது எதுவுமே கேட்கவில்லை. அவளின் நினைவுகளோ கடந்து போனது இளமைக்காலத்திற்கு.
“ஓகே அஸ்வதி நீ அவங்கள மீட் பண்ணி ஸ்காலர்ஷிப் ஸ்பான்சர் பத்தி சொல்லி காலேஜ் போக சொல்லிட்டு கிளம்பி வா” என்று ஒப்பித்தவள் நயனங்கள் நனைந்திருந்தன.
“மேடம்…”
யாரோ அழைப்பது கேட்க நயனங்களை மெல்ல மலர்த்தியவள்
“ஆங்.. சொல்லுங்க ராஜ்மோகன்”
“மேடம் நெக்ஸ்ட் சீன் போலாம் எல்லாரும் ரெடியா இருகாங்க”
உடனே எழுந்தவள் வெளியேறினாள்.
“ஆக்ஷன்”
கீர்த்தனா முற்றத்தில் அமர்ந்து தட்டில் பழையச்சோற்றுடன் தேங்காய் துவையல் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மதுவின் மீதான அதீத பிரியத்தால் மதுவில் முக்குளித்த ராசைய்யா
கன்னக்கதுப்பிலுள் பதுக்கி வைத்திருந்தப் பாக்குபுகையிலையை கீர்த்தனா உண்டிருந்த தட்டில் உமிழ்ந்தார். உடனே பழையச்சோற்றின் நீரோடு அந்த புகையிலைக் கலந்து அதன்
வண்ணத்தைப் பரப்பியது.
“உவ்வக்”
“கட் கட்… ராகினி கண்ணீரோடு தவிப்பான பார்வையா ஏறெடுத்து பாருங்க”
“மேம் இந்த சீன் ஒருமாதிரி ஆக்வாடா இருக்கு ப்ளீஸ்”
“ராகினி இது ஆக்டிங்தான். ஒரு காட்சியைப் படமாக்கும் போது அந்த கேரக்டராவே மாறினால் மட்டும்தான் இந்த சினி பீல்டில் நீங்க ஷைனாக முடியும். ரிலாக்ஸ் அண்ட் கெட் ரெடி டூ சீன் ஆல் ரைட்” கம்பீரமாக
ஒலித்தக் குரலுக்கு எதிர்வினையாக தலையை ஆட்டினாள் ராகினி. சிறிது நேரம் கழித்து அதேக்காட்சி படமாக்கப்பட்டது.
விழிகளில் நீருடன் ஏறெடுத்துத் தவிப்பாகப் பார்த்தாள். பசி வயிற்றைக் கிள்ளவே அந்த பாக்குபுகையிலையை எடுத்து கீழேப் போட்டவள் சாப்பிட எத்தனிக்க தன் காலால் தட்டினை எட்டி உதைத்து பசியில்லா முற்றத்திற்கு உணவை தானமாக்கினார்.
“என்னடி பாக்கத அப்பன் வந்திதுக்கேன் சாப்பிட சொல்லாம மர்யாத இல்லாம உக்காந்து தின்ற. எங்க உன் ஆத்தா? படுத்துட்டாளா? ஏய் சாப்பிட என்ன இர்க்கு?”
“அதான் எல்லாத்தையும் கொட்டீடீங்களே வேறு ஒன்னும் இல்லை. ஏப்பா இப்படி குடிச்சி குடிச்சி உன்னையும் அழிச்சி எங்களையும் சாவடிக்கிற?”
“ஏய் எதுத்து பேசுத பொட்டகழுத” என்று கீர்த்தனா முதுகில் கைகளால் தாளமிடத் தடுக்க வந்த அமராவதிக்கும் கன்னத்தில் செவ்வண்ண ஓவியவரிகள் பரிசாய் கிடைக்க அன்றைய பொழுது இனிதே முடிந்தது.
“கட்… வெல்டன் கைய்ஸ்” மனதார பாராட்டினாள் இழையினி.
அடுத்த காட்சி…
பொதுத்தேர்வுக்காக வீட்டின் பின்முற்றத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள் கீர்த்தனா. அப்பொழுது உள் நுழைந்த ராசைய்யா குடத்தை அப்படியேத் தூக்கி தண்ணீர் முழுவதையும் அவள் மீதும் புத்தகங்கள் மீதும் ஊற்ற படிப்பில் ஆழ்ந்திருந்த கீர்த்தனா புத்தகங்கள் ஈரமானதும் துடித்துப் போனாள்.
அடுப்பில் உலை வைத்திருந்த பாத்திரத்தையும் தட்டி விட்டவர் அமராவதியிடம் சண்டையிட்டார்.
“ தூங்குனதும் காசு மொத்தத்தையும் எடுத்துட்டா தெரியாது நினைச்சியோ? மனுஷன் குடிக்கக் காசில்லாமல் நடுங்குதான் பெரிய பருப்பு மாதிரி இவ படிப்பாளாம் இவ அடுப்பு ஊதுவலாம். எடுங்கடி காச”
“நான் எதுவும் எடுக்கல அத்தான்”
“பொய்யா சொல்ற எடுங்கடி காச”
இருவரையும் வசைப்பாடியவர் கீர்த்தனா காலிலிருந்த கொலுசினைப் பிடுங்க முயற்சிக்க, எழுந்தோடி உந்துருளியில் வெளியேறினாள்.
கைலியைத் தூக்கிக் கட்டிய ராசைய்யா அவளைத் துரத்தியோடி சரியாக உந்துருளியின் பின்கம்பியை பிடித்து இழுக்கவும் கீழே விழுந்தாள் கீர்த்தனா. பயந்து போனவள்
“அப்பா ப்ளீஸ்பா விடுங்கப்பா நானே கொலுசை தரேன்”
“ஓடுகாலி நாயே ஓட்டமா பிடிக்க இருடி வந்து வச்சிக்கிறேன்” என்றவாறு கொலுசினைப் பிடுங்கிக் கொண்டு மதுவை நாடிச்சென்றார்.
“கட்… ராகினி உங்களுக்கு எதுவும் அடிபடலயே?” என்றவாறு குனிந்தமர்ந்து அவளைப் பரிசோதித்தாள் இழையினி.
“நோ மேம் அம் ஆல்ரைட்”
அடுத்த காட்சி…
ஈரமான புத்தகங்களை காயவைத்தும் அவை நீரின் உபயத்தால் எழுத்துக்களெல்லாம் இரண்டர கலந்து படிக்க முடியாமல் போனது. ஆனாலும் அழியாத வரமாகிய இதுவரை எழுதியத் தேர்வுகள், படித்த
நினைவுகள், படித்ததை எழுதி பார்க்கும் பழக்கம் எல்லாம் சேர்ந்து அவளைத் தன்னம்பிக்கையோடு தேர்வெழுத வைத்தது. தேர்வின் முடிவில் பள்ளியில் முதலிடம் பெற்றிருந்தாள். அளவில்லா
மகிழ்ச்சியுடன் அமராவதியிடம் பகிர்ந்து கொள்ள அன்னையும் மகிழ்ந்து போனாள்.
அந்நேரத்தில் மதுவாசனையுடன் வந்த ராசைய்யா அமராவதியைச் சுவற்றில் தள்ளி அடித்துக் காசு கேட்க
எதைப்பற்றியும் யோசிக்காமல் துணிந்து, அடுப்பெரிக்க வைத்திருந்த காய்ந்த தென்னம்பாலையை எடுத்தவள்,
“அம்மாவை விடுப்பா விடுப்பா” என்று சரமாரியாக அடித்தாள். திடீர் தாக்குதலில் தடுமாறிய ராசைய்யா கீழே விழ, விழுந்த அடிகளில் அவர் நாசியிலிருந்து குருதிச் சொட்டியது.
“கீர்த்தனா என்னடி செய்ற” மனைவியாக பதற கீர்த்தனாவோ பயமின்றித் தைரியமாக நின்றிருந்தாள்.
“இனி ஒரு அடிகூட எங்கமேல விழுகக்கூடாது. குடிச்சினா வீட்டுக்கு வராதாப்பா. வந்தினா..”
தென்னம்பாலையை உயர்த்திக் காட்டியவளைப் பார்த்து அரண்டு போன ராசைய்யா ஒரு துணியை எடுத்து குருதியைத் துடைத்து அங்கேயே படுத்துக் கொண்டார்.
பள்ளிப்படிப்பை முடித்தவள் கல்லூரிச் செல்ல அங்கும் நன்றாக மதிப்பெண் எடுத்து ஒரு நிறுவனத்தில் மென்பொருளாளினியாகப் பணியாற்றினாள்.
ஒருநாள் அமராவதி திடீரென மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துடித்துப்போன கீர்த்தனா அன்னையின் முகத்தைப் பார்த்து அழுதாள்.
“கட் கட்… ராகினி இன்னும் பீல் வரனும். என்னைப் பாருங்க” என்றவள்
கசங்கிய முகத்துடன் கை நடுக்கத்துடன் அன்னையருகில் அமர்ந்து கண்ணீரோடு
“ம்மா.. இனி யார்மா எனக்கு இருக்கா? நீ வந்துடுமா வாமா… அம்மாஆஆஆஆஆஆஆஆஆ” என்று கதறினாள். அவளின் அழுகுரலில் பூமித் தன் இயக்கத்தை ஒரு நொடி நிறுத்தியது. வானில் பறந்தப் பட்சிகள் படபடவென இறக்கைகளை அடித்துப் பறந்தன. சுற்றியுள்ள அத்தனை பேரும் உறைந்து நின்றிருந்தனர். ராசைய்யா மதுவின் மயக்கத்திலிருந்தார்.
“அ..ம்..மா.. அம்மா”
கைத்தட்டல் சத்தத்தில் இயல்புக்கு வந்த இழையினி எழ
“வாவ் மேம் எக்ஸ்டார்டனரி” என்று பாராட்டினார்கள்.
கீர்த்தனா அழுது அரற்றி அனைத்துச் சடங்குகளும் முடிய ஊரை விட்டேச் சென்றாள். அழிவின் ஆதாரம் மதுவை நாடித் தானே தன் குடும்பத்தை இழந்தார் ராசைய்யா.
சுபம்.
படம் முடிவடைந்து மூன்று மாதங்கள் கழித்துத் திரையரங்கில் திரையிடப்பட அபார வெற்றிப் பெற்றது.
நடித்த அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ந்தாள் இழையினி. துணிந்து செயல்பட்டவள் இன்று அனைவரும் பாராட்டும் உச்சத்தில் இருக்கிறாள்.
“மேடம் சந்தியா உங்க ஸ்பான்சரை அக்செப்ட் பண்ணி காலேஜ் போறாங்க. அவங்க அம்மா ரெகவர் ஆனதும் நம்ம பவுண்டேஷன்லேயே வேலைக்கு வரலாம்னு சொல்லிட்டேன்” அஸ்வதி சொல்ல கண் கலங்கினாள் இழையினி.
“மேடம்”
“அம் ஓகே அஸ்வதி. நான் படிக்கும் போது சந்தியா சின்னப்பொண்ணு. ஏதோ என்னால் முடிந்தது” என்றாள்.
“மேடம் படம் செம்ம ஹிட்டு. அதுவும் அந்த பாடல் வேறு லெவல்” அவள் சொன்ன பாடல்தான் விருந்தினறையில் ஒலித்தது.
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் கனவு
எழுத்து படிப்பு அதிலே உயர்வு
ஒரே வாழ்க்கை ஒரே இலட்சியம்
தன்னை மறந்து
மதுவில் மிதந்து
மண்ணில் விழுந்து
தன்னை இழந்த மறவோன்
மதுவின் சுகத்தில் சுகந்தம்
நரக வழியில் பயணம்
மனம் முழுதும் படிப்பு
ஈரம் தோய்ந்த பனுவல்
அழியாத வரமாய் கல்வி
கேட்க நினைத்த கேள்வி கேட்கும்முன் விழுந்தாள்
இதுதான் தந்தை உறவோ
மங்கை துணிந்தாள்
ஆளன் அரண்டான்
படித்தாள் மேலே ஏறினாள்
அன்னையின் அன்பிலே
வாழ்க்கை தொலைத்த தாயே
எனைவிட்டு ஏன் போனாயோ
இந்த நிலைதான் என்ன விதியோ
வாழ்வேன் என்றும் உனக்காக
ஒரே வாழ்க்கை ஒரே இலட்சியம்
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.