எழுதியவர்: நா.பா.மீரா
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்படிக் கடனா வாங்கிக் குவிச்சிட்டேனே . பத்தும் பத்தாததுக்கு வீணாப் போன நண்பனுங்க பேச்சைக் கேட்டு ஆன்லைன் ரம்மி ஆடி வேலை பார்த்துக் கிடைச்ச சம்பளப் பணத்தையும் கோட்டை விட்டுட்டேனே .
கடன் கொடுத்தவங்க எல்லாம் மாசம் பொறந்ததும் கழுத்துல கத்திய வைப்பானுன்களே . எப்படிச் சமாளிக்கப் போறோம் ….
மறந்தும் கூட பொண்டாட்டி, பிள்ளைங்க வயித்தக் கழுவவே கஷ்டப்படுவாங்களேங்கிற எண்ணம் வேலவனுக்கு வரவேயில்லை.
இவ்வளவுக்கும் வள்ளி வேலவனைக் காதலித்துக் கைப்பிடித்தவள்.ஆரம்பத்தில் அவனது ஆடம்பரத்திலும், டம்பப் பேச்சிலும் மயங்கினாலும் ..நிதர்சன வாழ்க்கை அவளை அச்சுறுத்தியது.
இங்க பாருங்க ..ஆடம்பரமே வேணாம் .ஓரளவுக்குப் படிச்சிருக்குற என்னையும் வேலைக்குப் போக வேணாம்னு வீட்டிலேயே முடக்கிட்டீங்க.நமக்கும் ஒன்னுக்கு ரெண்டு பிள்ளைகளாச்சு…
ஆசைக்கும், ஆஸ்திக்கும் வழியில்லாட்டிலும் , அதுங்களுக்கு மூணு வேளை சோறும், அடிப்படை வசதிகளோட படிப்பும் வேணுமில்லே?
ஏய்… சும்மா ..பணம் பணமின்னு ஆலாப் பறக்காதடி . ஆமா இவளுக்குப் பெரிய கலெக்டர் வேலை காத்துக்கிட்டிருக்கு …நாந்தான் போக வேணாம்னு சொல்லிட்டேன் ..போவியா…நக்கலாகப் பேசிவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.
வள்ளி ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாகப் பசியில் சுருண்டு படுத்திருந்த குழந்தைகளை எழுப்பினாள்.அழக்கூட சக்தியில்லாமல் அவள் கண்களில் உள்ள நீர் கூட வற்றியிருந்தது.
கையில் ஒற்றைப் பைசா கூட இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு முடிவுடன் ரயில் தண்டவாளத்தை நாடினாள் .
ஆயிற்று .. வள்ளி குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாரம் ஓடியே போய்விட்டது.
அன்று….
வேலை முடிந்து இரவு வீடு திரும்பியவன் ..திறந்தே கிடந்த வீட்டைப் பார்த்து அதிர்ந்தான் .
எங்க போயிருப்பா ..கழுதை கேட்ட குட்டிச்சுவரு..அம்மா வீட்டுக்குத்தான் போயிருப்பா.அவங்க விரட்டி அடிச்சாத் தானா திரும்பி வரட்டும் .
அவளை, முதன்முதலில் பார்த்த தருணத்தில் காதலாகிக் கசிந்துருகியதெல்லாம் மறந்தே போனதோ?
முதலில் பெண் குழந்தையும் , அடுத்து சில வருட இடைவெளிகளில் ஆண் குழந்தையும் பிறக்க…
ரெண்டு குழந்தைங்களாச்சு.வருமானத்துக்கும் வழியில்லாம, எப்படி வளர்த்து ஆளாக்கப் போறோமோ ..என்று புலம்பியவளிடம் ….
நம்ம குழந்தைங்க பிறந்த நேரம் ..ஐயாவோட ஸ்டேடஸ் எங்கியோ போகப் போகுது தெரிஞ்சுக்க …இல்லாத காலரை அன்று இழுத்துவிட்டவன்..தனக்குக் கல்யாணமாகிக் குழந்தைகள் இருப்பதையே இன்று வசதியாக மறந்துவிட்டானோ?
வேலவன் நினைத்தது மாதிரியே நெருக்கடி உருவாகியது. வீட்டின் உரிமையாளர் ஒருபுறம் ஆறு மாச வாடகை பாக்கியைக் கேட்டு நச்சரிக்க ..கடன் கொடுத்தவர்களின் அழுத்தம் ஒரு புறம் …தனிமை, கையாலாகத்தனம் , விரக்தி அனைத்தும் ஒன்று சேர தூக்கில் தொங்க ஆயத்தமானான் .
திடீரென்று ஒரு அசரீரியின் குரல் …அறையில் சட்டென்று வெளிச்சம் பரவியது.
சே..சின்ன வயசுல நல்லவனாத்தானே இருந்த …எப்ப இவ்வளவு சுயநலக் காரனா மாறின? கட்டின பொண்டாட்டி , புள்ள குட்டிங்க யாரைப்பத்தியும் கவலையில்லாம ஜாலியாச் சுத்தித் திரிஞ்சிருக்கே…
ஏய் ..என்ன நீ… நானா அவங்கள வீட்ட விட்டு வெளியே போகச் சொன்னேன் . இப்ப என்ன எனக்குக் கடன் தலைக்கு மேலே போயிட்டு …
நா செத்துப் போனா இன்சூரன்ஸ் , கிராஜுவிட்டி மற்றும் பி.எப். பணமெல்லாம் அவளையும், பசங்களையும்தானே போய்ச் சேரும். என்னைப் போய் சுயநலக்காரன்னு சொல்ற …கோபத்தில் நாக்குழறியது வேலவனுக்கு.
ஏதாவது சொல்லிடப்போறேன் …அந்தப் பணத்தை அனுபவிக்க அவங்க உயிரோட இருக்க வேணாமா…
என்ன சொல்ற நீ…தொண்டை அடைத்தது அவனுக்கு.
நா உன் கண்ணு முன்னாடி விரிய வைக்கிற காட்சியைப் பாரு, உனக்கே புரியும்.
திருத்தணியை நோக்கிச் செல்லும் விரைவு ரெயிலில் குழந்தைகளுடன் பாயத் தயாராயிருந்த அந்தப் பெண்ணைப் பற்றி இழுத்தான் அந்த இளைஞன்.
முதலில் அந்த இடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி அருகில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பசியாற்றினான்.
இப்ப சொல்லுங்கக்கா ..சாகத் துணியார அளவுக்கு என்ன பிரச்சனை?
தங்கள் பசி போக்கியவனை நன்றியோடு நோக்கித் தன் கதை சொன்னாள் வள்ளி.
அக்கா ..நா ஒன்னு சொன்னா நம்ப மாட்டீங்க .நானும் சாகுற எண்ணத்தோடதான் வந்தேன். எப்ப உங்களைக் காப்பாத்தினேனோ.. அப்பவே அந்த எண்ணம் என் மனசிலேருந்து மின்னல் மாதிரி மறைஞ்சிடுச்சு .
வாழ்க்கையோட முரண்பாட்டப் பாருங்க.உங்களுக்குப் பணம் இல்லாத குறை. என்கிட்டே அது அதிகமா இருக்கறதால கழுத்துக்கு மேலே கத்தி. பங்காளிங்க போட்டுத் தள்ளுறதுக்கு முன்னாடி நாமே செத்துடலாம்னு வந்தேன்.
நா எங்கயாவது போயி பொழைச்சுப்பேன். இந்தாங்க என்னோட சூட்கேஸ் . சாகறதுக்கு முன்னாடி என் தோழிகிட்ட சேர்த்துடலாம்னு நினைச்சேன். இப்ப என் எண்ணத்த மாத்திக்கிட்டேன்.
தோழிகிட்ட பேசிட்டேன். இதுல ஒரு கோடி ரூபா இருக்கு. உங்களுக்கு வேண்டிய வசதியைச் செஞ்சு கொடுத்து பாதுகாப்பா கவனிச்சிக்குவா.புள்ள குட்டிங்களோட சந்தோஷமா இருங்க.
காட்சி முடிந்தது.
ஆ ..ஒரு கோடி ரூபாயா …சுருக்கி விலக்க முயலுகையில் வாய் பிளந்ததில் அது இறுகியது…வேலவனின் கதை முடிந்தது.
அசரீரியும், வெளிச்சமும் மறைந்தன.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.