எழுதியவர்: புனிதா பார்த்திபன்
மெய் எழுத்து வார்த்தை: பேரன்பு/ன்
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தோழியைச் சந்திக்க நேர்ந்தது. வயதானால் வனப்பு
குறையும் என்பர். அவள் முகத்தில் ஓரடுக்கு வனப்பு அதிகமாகியிருந்தது. பேசுகையிலெல்லாம்
சிறு புன்னகை அவளிதழ்களில் ஓவியமாகியது. ஒருவேளை பொருளாதாரத்தில் பெரிய
நிலைக்கு வந்திருப்பாள், அந்த மகிழ்வின் விளைவோ இவ்வழகு என நினைத்தபடி அவளிடமே
வினவினேன். புன்னகைத்தவள், “இப்போலாம் எல்லார்கிட்டேயும் அன்பா இருக்க
கத்துக்கிட்டேன்” என்றாள்.
நான் புரியாமல் பார்க்க, “வீடோ, வெளியிடமோ நம்மள சுத்தி இருக்குறவுங்களோட குறையத்
தாண்டி அன்பு செலுத்த ஆரம்பிச்சுட்டேன். நம்மட்ட இல்லாத குறையா? அன்பா இருந்தா,
அனாவசிய வார்த்தை குறையுது, பேசுன வார்த்தைய அலசி நான்தான் சரின்னு வாதாடி
பிறக்குற வஞ்சக எண்ணம் இல்லாமப் போயிடுது, முக்கியமா அன்பு நேர்மையைக் கொண்டு
வருது, அந்த நேர்மை கடவுளுக்கு நெருக்கமாக்குது. நமக்கு எதாவது தவறோ, துரோகமே
நடந்தாக்கூட கடவுள் நம்மள அன்போடு அரவணைச்சு “சரியாகிடும்னு” சொல்ற மாதிரியொரு
உணர்வு வருது. என்னடா ஞானி மாதிரி பேசுறேன்னு சிரிப்பு வருதா. இதெல்லாம் என்
அனுபவம். அன்பு மனச மட்டுமில்ல முகத்தையும் அழகாக்கும்னு நினைக்குறேன்” என்று
சொல்லி புன்னகைத்தாள். என்னகத்துள்ளும் அழகாய் ஏதோவொன்று கசிய ஆரம்பித்திருந்தது.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.