எழுதியவர்: புனிதா பார்த்திபன்
மெய் எழுத்து வார்த்தை: மனநிம்மதி/ம்
மொட்டை மாடியில் தென்றல் வருட, பறவைகள் வரிசையமைத்து அழகாய் வீடு
திரும்பும் காட்சியைக் கண்டு ரசித்தபடியே மாலை, தேநீரை ருசிக்க அபர்ணாவிற்கு மிகவும்
பிடிக்கும். இன்று, எப்படிப் படியேறி வந்தாள் என்றே தெரியாத அளவிற்கு அவள் மனதில்
பாரமேறியிருந்தது. கைத்தவறி கொட்டிய திரவமாய், இன்று காலை தன்னையுமறியாது
வார்த்தைகளை சரமாரியாக வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொட்டிவிட்டிருந்தாள்.
பேசியவை தவறென்றறிந்த போதும், அதை சரிசெய்ய இயலாமல் மனம் குழம்பித்தவித்தது.
எங்கோ வெறித்தபடி ஒவ்வொரு மடக்காய் தேநீரைக் குடித்து முடித்தவள் கோப்பையைக்
கீழே வைத்தபோது, மனம் லேசாய் ஆசுவாசமடைந்திருக்க, குழம்பிய மனதோடு
எழுந்தவளின் கண்களுக்கு கோப்பையின் அடியிலிருந்த தேநீர் கசடு தென்பட்டது. இதை
உடனே தண்ணீர் ஊற்றிக் கழுவாவிடில் காய்ந்து ஒட்டிப்போகும் என்றறிந்தவளின் மனம்,
தன் மனதில் உண்டாகிய கசடும் அதுபோல் உடனே அகற்றப்பட வேண்டும்
இல்லையென்றால் கறை மனதினுள் நிரந்தரமாய் தங்கிவிடும்தானே என்றுரைக்க, செய்த
தவறுக்கான மன்னிப்பைக் கேட்டுவிடவேண்டும் என்கின்ற முடிவில் தேநீர்க் கோப்பையை
ஏந்தியபடி மனநிம்மதியோடு கீழே இறங்கினாள்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.