எழுத்தாளர்: இந்துமதி
மாடியில் துணி காயப் போட்டு படி இறங்கும் போது அவள் வீட்டுக்கு எதிரே இரண்டு நபரின் செருப்புகள் தாறுமாறாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடக்க பார்த்த நீலாவுக்கு கோபம் தலைக்கேறியது.
அவளின் பக்கத்து ஃபிளாட் ஆட்களுக்கு எப்பவும் இதே வேலை தான்.
ஒவ்வொரு முறையும் அவர்களை அழைத்து இப்படி போட்டால் நான் வீட்டுக்குள் எப்படிப் போவது என்று கேட்டுக் கேட்டு அலுத்து போச்சு.
எந்த விதமான முகபாவமும் காட்டாது ரொம்ப பணிவு போல் நல்லவங்க மாதிரி செருப்பை எடுத்து மறுபடியும் என் வீட்டு வாசலில் ஒழுங்காக போடுவார்கள்.
அவங்க வீட்டில் செருப்பு போடும் இடத்தில் ஈசான்ய மூலையில் சுவாமி இருக்கிறார் , கடவுளுக்கு நேராக செருப்பு போட்டால் பாவம் னு சொல்கிறார்கள்.
இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது உண்மையெனில் இவர்கள் செருப்பை எங்கு போட்டாலும் அங்கே இருப்பார் அல்லவா?
ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் வைங்க என்றால் அதையும் என் வீட்டு வாசலில் தான் வைப்பேன் என்றார்கள்.
அப்போ எங்க செருப்பை எங்கே போட என்று கேட்டால் ஏதோ போனால் போகிறதென்று அப்படியே எங்க செருப்பு பக்கத்தில் போட்டுக்கங்க என்று பதில் .
வந்த கோபத்தில் செருப்பை வேகமாக காலால் எட்டி உதைத்து அவர்கள் வீட்டு வாசலுக்குத் தள்ளி விட்டாள்.
ஒரு வெற்றிப் புன்னகை முகத்தில் வந்த அந்த நிமிடம் அவள் மனம் உரக்கச் சொன்னது உனக்குள் இருக்கும் ஓநாய் இன்று வெளியே வந்துடுச்சி நீலா என்று.
நன்றி