எழுத்தாளர்: அ. கௌரி சங்கர்
காளியப்பன் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு திருடச்சென்ற நேரம் விடிகாலை 03.00 மணி.. கோவில் அருகில் காவலாளி குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தான். காளிக்கு தடங்கல்கள் இருப்பதாக தெரியவில்லை. மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு வெது வெதுப்பையும் ஏற்றிக்கொள்ளவேண்டி, இடுப்பில் சொருகிவைத்திருந்த பாட்டிலில் இருந்த அரை பாட்டில் பிராந்தியை அப்படியே தொண்டைக்குழியில் ஊற்றி நனைத்துக்கொண்டான். மெதுவாக சந்நிதானத்தின் முன்பு நின்று பூட்டை கள்ளச்சாவி போட்டு லாவகமாக திறந்தான். பத்திரகாளியின் கழுத்தில் ஜொலித்துக்கொண்டு இருந்த சுமார் 5 பவுன் நகைகள் வினாடியில் அவனுடைய வேஷ்டிக்குள் சென்று மறைந்தது.
வெளியில் செல்ல யத்தனித்தவன் கண்களில் ஒரு முனையில் வெள்ளி வளையம் செருகப்பட்டு இருந்த அந்த சங்கு கண்களில் பட, நொடியில் சங்கு அவனுடைய கைக்கு மாறியது. சங்கு ஊதுவது பெரும் செல்வத்தை கொண்டு வந்து தரும் என்று கிராமத்து ஜோசியர் சொன்னது நினைவுக்கு வர, சங்கை உதடுகளில் பொருத்தி அவன் ஊதவும் , சங்கு பெருங்குரல் எடுத்து ஒலிக்க, அடுத்த நிமிடத்தில் அவன் சரணடைந்தான் இரண்டு காவலர்கள் பிடியில்..
முற்றும்.