எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
ஒரே மேடையில் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது இரு திருமணங்கள்.
பெண் எடுத்து, பெண் கொடுத்து திருமணம். ஒரு வீட்டில் பிறந்த அண்ணன் தங்கை இருவரும், வேறு வீட்டில் பிறந்த அண்ணன் தங்கையை திருமணம் முடித்தனர். இரண்டு பெற்றோர்களும் மிகவும் மகிழ்வாக இருக்க, திருமணம் சீரும் சிறப்புமாக முடிந்தது.
அதன் பின் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் இரு தம்பதியர்களும் ஒன்று போலயே நடந்தது.
மறு வீடு, ஹனிமூன் தலைப்பொங்கல் என்று எல்லாம் இரு தம்பதியருக்கும் ஒன்று போலவே நடக்க, இறைவனின் அருளால் இரு பெண்களும் ஒன்று போல் குழந்தை உண்டாகினர்.
ஒரே சமயத்தில் குழந்தை உண்டான நாத்திகள் பார்த்துக்கொள்ள கூடாது என்று பெரியவர்கள் சொல்ல, அதன் பிறகு இரு பெண்கள் பார்த்துக் கொள்ளாமல் அவர் அவர்களது வீட்டிலேயே இருந்தனர்.
பிரசவ வலியும் இருவருக்கும் ஒன்று போல் வர, இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவருக்குமே பிரசவம் சிரமமாக, ஒரு பெண் பிரசவத்தில் தன் குழந்தையை இழந்தாள், ஒரு குழந்தையோ தன்னை ஈன்றெடுத்த அன்னையை இழந்தது.
குழந்தையை இழந்த அன்னை கதறி அழ, அன்னையை இழந்த குழந்தையும் அழுதது பசியால்.
குடும்பமே கதறி அழுது கொண்டிருக்க, குழந்தையின் அழுகை, குழந்தையை இழந்த தாய்க்கு மட்டுமே கேட்டது.
வேகமாக தாதியரை அழைத்து குழந்தையை எடுத்து வர சொல்ல, அழுத குழந்தையை கொண்டு வந்து அவளின் கைகளில் கொடுத்தனர் தாதியர்.
தன் இறந்த குழந்தையை தன் அண்ணனின் குழந்தையின் வடிவில் கண்டாள்.
தாயை இறந்த தன் அண்ணனின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தாயானாள்.
முற்றும்.