எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
“அம்மா, நம் வீட்டு பூசணி கொடியில் பூ பூத்திருக்கும்மா” என்று மகிழ்ச்சியாக துள்ளி குதித்த மகளை கண்டு புன்னகைத்து கொண்டே சமையல் செய்தாள்.
“அம்மா நம் பூசணி காய் பெரிசானதும் சாம்பார் செய்வீங்களா? இல்லைனா இனிப்பு செய்வீங்களா?” என்றாள் அம்மாவின் முகத்தைப் பார்தவாறே.
“முதலில் காய்க்கட்டும்டா. அப்போ உனக்கு என்ன வேண்டும் என்று சொல்லு, அதை செய்து தருகிறேன்” என்று பொறுமையாக கூறினாள் தாய்.
கட்டிட வேலை செய்யும் தாயும் தந்தையும் சீக்கிரம் சாப்பிட்டு உறங்க வேண்டுமே என்று அதன்பிறகு தொந்தரவு செய்யாமல் வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பித்தாள்.
தினமும் பள்ளி செல்லும் முன்பும் பள்ளி விட்டு வந்த பின்பும் பூசணி கொடியில் பூவின் நிலையை பார்ப்பதை வாடிக்கையாக்கி விட்டாள்.
நாட்கள் கடக்க பூ பிஞ்சாகியது, பிஞ்சு காய்யாகியது. காய் பெருத்தது.
தனது அம்மாவிடம் “எப்போ பூசணி காய் பறிப்பீங்க” என்று கேட்டு நச்சரிக்க,
“நாளைக்கு உனக்கு லீவு தானே. அப்போ பறித்து உனக்கு எப்படி வேண்டுமோ அப்படி செய்து கொடுக்கிறேன்” என்று கூறி பள்ளிக்கு அனுப்பினாள்.
மகிழ்வாக பள்ளியில் இருந்து வந்ததும் பூசணி கொடியை பார்க்க ஓடினாள். பூசணி காய் இருந்த இடம் வெறுமையாக இருக்க, அதிர்ந்து “அம்மா” என்று அலறி, அம்மாவிடம் ஓடிவந்து, “பூசணி காய்யை காணும்மா” என்று அழுதாள்.
அதிர்ந்த தாயும், “சரி விடு யாராவது பறித்து இருப்பார்கள். அடுத்து காய் வருதுல்ல. அதை உனக்கு செய்து தருகிறேன்” என்று கூறி, ஆறுதல் படுத்தி, உணவு கொடுத்து உறங்க வைத்தாள்.
வேறு என்ன செய்வது. உன் அப்பா தான் பறித்து, பூஜை செய்ய கொடுத்து காசு வாங்கி குடித்துவிட்டார் என்றா சொல்ல முடியும்.
முற்றும்.