எழுத்தாளர்: ஆர். ஐஸ்வர்யா
அன்று பேருந்தில் ஏகப்பட்ட கூட்டம். ஜெயந்தனின் கையிலிருந்த பையில் புத்தம்புது பட்டி வேஷ்டி. அவனது கல்யாணத்திற்குப் பிறகு பதினோரு வருஷம் கழித்து இப்போது தான் அவனால் வாங்க முடிந்தது, அதுவும் மச்சினனின் திருமணத்திற்கு அவனுக்கு துணியெடுக்க தந்த பணத்தில் கூடக் கொஞ்சம் போட்டு வாங்கியிருந்தான்.
அவனது பத்து வயது மகன், ‘’அப்பா, எனக்கும் சின்னதா பட்டு வேஷ்டி வேணும்’’ என்று அடம்பிடித்தான். பிறகு வாங்கித்தருகிறேன் என சொல்லியிருந்தான். உள்ளூர உறுத்தியது. டிரைவர் சடன் பிரேக் போட்டதில், நின்றுகொண்டிருந்தவன் தடுமாறி இருக்கையில்
அமர்ந்திருந்த பெரியவர் மேல் விழ, பையிலிருந்த வேஷ்டி நழுவி, பெரியவரின் கையில் வைத்திருந்த குடைக்கம்பியில் பட்டு கிழிந்தது. பதறிப்போய் எடுத்துப்பார்த்தான். நடுவில் பாதிக்கு மேல் கிழிந்திருந்தது. இது பையனுக்குத் தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது.
ஆனாலும் அவனுக்கு சந்தோஷமாகத் தான் இருந்தது.
முற்றும்.