எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்.
கடற்கரையில் அலையோடு விளையாடிக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா.
அலை உள்செல்ல அவளின் கண்களுக்கு தெரிந்தது அழகான ஒரு சங்கு.
குனிந்து அதை எடுப்பதற்குள் அடுத்த அலை வந்து சங்கை மறைக்க, ஏமாற்றமாக மாறியது அவளது முகம்.
மீண்டும் அலை உள்செல்ல, அவளது கண்கள் வேகமாக தேடியது அச்சங்கை.
இம்முறை ஏமாற்றாமல் அருகிலே தெரிய, அடுத்த அலை வருவதற்குள் வேகமாக எடுத்துவிட்டாள்.
கையில் சங்கு கிடைத்ததும், மகிழ்ச்சியாக கடல் நீரிலேயே கழுவி, அம்மா என்று தன் தாயை அழைத்துக் கொண்டே ஓடிவந்தாள் கரையை நோக்கி.
அங்கு அமர்ந்திருந்த தன் தாயின் காதில் சங்கை வைத்து “அம்மா, சங்கின் சத்தத்தை கேளுங்கம்மா” என்று சந்தோசமாக கூறினாள்.
பின்னர் தானும் காதில் வைத்து அதில் கேட்கும் ஒலி போல சப்தம் எழுப்பி, உடலையும் வளைத்து ஆடினாள்.
“இதுதான் சங்கின் சத்தமா அம்மா? சங்கு முழங்கும் என்பார்களே? அதுதான் இதுவா?” என்று ஆவலுடன் கேட்டாள்.
பத்து வயது மகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு, தானும் மகிழ்ந்து, இல்லை என்று தலையாட்டி, “அது காற்றின் சத்தம், சங்கின் வழியாக கேட்கிறது” என்று தனக்கு தெரிந்தபடி, விளக்கம் கொடுத்தாள் ஐஸ்வர்யாவின் அன்புத் தாய்.
முற்றும்.