எழுத்தாளர்: S. முத்துக்குமார்
என் கண்களை மூடிக்கொள்ள சொல்லி, கைகளை பிடித்து ரூமுக்குள் அழைத்துப் போனாள் பேத்தி. கதவைச் சாற்றி, விளக்கை அணைத்து, “தாத்தா மேலே பாருங்க..” என்றாள். மேல் சுவற்றில் சிறு நட்சத்திரங்கள், சந்திரன், பறவைகள் என்று மின்னின. பிரமித்துப் போன நான், “அது என்னடா தேள் மாதிரி..” என்றேன். “ஐயோ தாத்தா அது லிசார்டு..” சிரித்தாள் பேத்தி.
நான் சிறுவனாக இருந்தபோது ஓட்டு வீட்டில் தான் இருந்தோம். பனை மரத்தை குறுக்காக வெட்டி, இடைஇடையே மூங்கில் பிளாச்சு அடித்து மேலே ஓடுகள் அடுக்கி இருப்பார்கள்…பகல் நேரத்தில் ஓட்டின் மீது குரங்குகள் ஓடும்போது பயமாக இருக்கும். ஓடுகள் சிதறி விழும். கோடைக்கால இரவுகளில் ஓட்டின் வழியே நகரும் பூச்சிகள் கீழே தூங்கும் நம் மீது விழுந்து விடும்.
ஒரு முறை தேள் கீழே விழுந்து, என் காலில் ஏறியபோது பத்து வீடுகளுக்கு கேட்பது போல அலறினேன்… என் பேத்தியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன்….கதவைத் திறந்து, “தாத்தா லிசார்டை பாத்து பயந்துட்டாரு..” என்று பேத்தி சத்தமாக சிரித்தாள்.
முற்றும்.
