எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
அம்மா, இந்த அம்மம்மாவை பாருங்கம்மா. இந்த தடவையும் என்னை தோற்கடித்து விட்டார்கள்” என்று தன் தாயிடம் சொல்லி குறைப்பட்டுக் கொண்டான் ஆகாஷ்.
“என்ன ஆச்சு?” என்று அவனிடம் கேட்க,
“நேற்று தானே PS 4 ல அந்த கேம்ஐ அவுங்களுக்கு சொல்லி கொடுத்தேன். இன்னைக்கு இரண்டு தடவை என்னை தோற்கடித்து விட்டார்கள்மா!” என்றான் சோகமாக.
அவளின் மகளோ “மம்மி, அம்மம்மா எவ்ளோ சூப்பரா விளையாடினார்கள் தொரியுமா?” என்று உணர்வுபூர்வமாக குதித்தும் ஓடியும் காண்பித்தாள்.
அப்போது அங்கு வந்த அவனது அம்மம்மா “என்னடா? அம்மாகிட்ட வந்து புலம்பிகிட்டு இருக்கிற” என்று அவனை மேலும் வெறுப்பேற்றினார்.
“போங்க அம்மம்மா. நீங்க ரொம்ப பேட். என்னை எப்ப பார்த்தாலும் கேம்ஸ் ல பீட் பண்ணிடுறீங்க. இனிமேல் உங்களுக்கு எந்த கேம்ஸ்சும் சொல்லி தர மாட்டேன்” என்று முறுக்கிக் கொண்டான்.
“ஓஹோ, அப்படியா? அப்போ நான் ஊருக்கு போகும் போது PS 4ஐ எடுத்துட்டு போயிடுறேன். உனக்கு வேண்டுமானால் உன் அப்பாகிட்ட சொல்லி PS 5 வாங்கிக்கோ” என்று அவனுக்கு பிபியை ஏற்றிவிட்டார், தன் பேத்தியை பார்த்து “உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், மம்மி என்று சொல்லக் கூடாது, அம்மா என்றுதான் சொல்ல வேண்டும் என்று” என்று அவளை திருத்தவும் செய்தார் அவர்களின் செல்ல அம்மம்மா.
அவர்கள் இருவரின் சண்டையை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆகாஷின் அம்மா. அவளுக்கு என்றும் தன் தாயை நினைத்து பெருமையாகதான் இருக்கும்.
தன்னை வளர்க்கும் போது எப்படி எனக்கு சமமாக தன்னை மாற்றிக் கொண்டாறோ! அதேபோல் இன்று என் மகனுக்கும் மகளுக்கும் இணையாக தன்னை மாற்றிக் கொண்ட அம்மாவை, இன்றும் அதே பெருமிதத்துடன் தன் தாயை பார்த்தாள்.
என்னதான் ஆகாஷ் தன் அம்மம்மா பற்றி அம்மாவிடம் குறை கூறினாலும் அசாத்திய திறமை கொண்டு அசத்தும் தன் அம்மம்மாவை கண்டு வியக்காமல் இல்லை. அவர்களுக்கு மிகவும் பிடித்த செல்லமான அம்மம்மா அல்லவா…
முற்றும்.
