காதல் பேசும் பிப்ரவரி: பொம்மைக் காதல்

by admin 2
30 views

எழுதியவர்: குட்டிபாலா 

ஜோதிகா– பெயருக்கு ஏற்றார்ப்போல் துறுதுறுத்த கண்கள்; நிரந்தர புன்சிரிப்புடன் கூடிய முகம்; மாநிறம். வாளிப்பான ஒல்லியும் இல்லாத பருமனும் அல்லாத உடல்வாகு. அதற்கேற்றார் போன்ற கச்சிதமான உடை.மொத்தத்தில் எவரையும் ஒரு முறை பார்த்தால் மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் உருவம். ஜோதிகா தன் கல்லூரித் தோழிகளுடன் அந்த மெகா ஷாப்பிங் மாலில் கடை கடையாக ஏறி தான் விரும்பிய ஒரு பொருளை தேடினாள். பொதுவாக எதையும் தேடித்தேடி இப்படி பல கடைகள் ஏறி இறங்குபவளல்ல அவள். தந்தையிடம் தேவையை  சொன்னால் போதும். அவர் வாங்கி வந்து தந்துவிடுவார். இதுதான் வழக்கம். கூட வந்த  தோழிகளுக்கும் அவள் ஒரு பொருள் வாங்க ஆசைப்பட்டு— அதுவும் தானே கடை கடையாக சென்று அலைவது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
தோழிகளில் ஒருத்தியான மாளவிகா அவளிடம் “என்ன தேடுகிறாய்? யாருக்காக வாங்குகிறாய்? தயவு செய்து சொல். நாங்களும் உனக்காக தேடுகிறோம்” என்று கேட்டாள். அதற்குப் பதிலாக ஜோதிகா ‘இதோ இந்த கடையில் கிடைத்துவிடும்’ என்று கடை கடையாக சென்றாளே தவிர அவள் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. மாளவிகாவுக்கு அவள் சுபாவம் நன்கு தெரியும். சுமார் இரண்டு வருடங்களாக
அவளுடன் நெருங்கி பழகி வரும் தோழி அவள்.
ஜோதிகா நண்பிகளுக்கு இடையே கலகலப்பாக பழகுவாள். யாரிடமும் வம்புக்குப் போகாதவள். வசீகரமான அழகுடன் கூடிய அவளிடம் சில இளைஞர்கள் அவ்வப்போது கேலி பேசுவதுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவள் ஏதும் பேசாமல் மௌனமாக ஒதுங்கி விடுவாள். அவள் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்று தெரிந்தவர்கள் அவளைப் பார்த்துப் பேசிட  ஆவலிருந்தும் ஜாக்கிரதையாக
நகர்ந்துவிடுவர். இப்படி ஒதுக்கமான சுபாவம் கொண்ட ஜோதிகா அன்று 3 மணி நேரமாக என்ன பொருள் தேடுகிறாள், யாருக்காக தேடுகிறாள் என்பது மாளவிகாவுக்கும் மற்றவர்களுக்கும் ஆச்சர்யத்தை அதிகமாக்கியது.
திடீரென்று ‘மாளவிகா மாளவிகா’ என்ற ஜோதிகாவின் குரலைக் கேட்டதும் மாளவிகாவும் மற்றவர்களும் ஜோதிகாவை நோக்கி ஓடினர். அங்கே ஜோதிகா ஒரு கிறிஸ்டல் பொம்மையுடன் நின்று கொண்டிருந்தாள். அது ஒரு அழகிய பெண் தன் இதயத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறு கையால் யாரையோ அழைப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.  அதன் கீழே ஆங்கிலத்தில் “என் இதயம் காத்திருப்பது உனக்காக- உனக்காக மட்டுமே” என்று பொறிக்கப்பட்டிருந்தது. எவரையும் கவரும் வகையில் அமைந்த அந்த பொம்மை ஜோதிகாவை கவர்ந்தது போலவே மாளவிகாவையும் மற்றவர்களையும் வெகுவாக கவர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த பொம்மையை கிப்ட் பார்சல் செய்ய சொன்ன ஜோதிகாவிடம் மாளவிகாவும் வேறு சிலரும் “என்ன ஜோதி யாருக்காக இந்த பரிசு? உன் இதயம் காத்திருப்பது யாருக்கு? சொல்லிவிடு” என்று ஆர்வமாக கேட்டார்கள்.ஜோதிகா முகத்திலே வெட்கம் கலந்த மென்முறுவல். 
கன்னக்கதுப்புகளிலே செம்மை படர்ந்தது; கண்களைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக “மாளவிகா, கொஞ்ச காலம் பொறு. இப்பரிசுக்கு வரும் பதிலைத் தெரிந்து கொண்டவுடன் உங்களுக்கெல்லாம் சொல்லுகிறேன். அதுவரை இது ரகசியம்” என்று சொன்னாள். அவள் குரலிலே ஒரு குளுமை; இனிமை. காதல் வயப்பட்ட கன்னியரின் நிலை அதுதானோ  என்று விடாமல் கிண்டலடித்துக் கொண்டே வெளியே வந்த தோழியர்கள்  தத்தம் வாகனங்களில்  ஹாஸ்டலுக்கு திரும்பினர். ஜோதிகா வருகிற வழியிலேயே கொரியர் ஆபீஸ் சென்று அந்த கிப்ட் பார்சலை அனுப்பி விட்டு ஹாஸ்டலுக்கு திரும்பினாள்.
ஒரு வாரம் விடுமுறையில் மதுரையில் தன் வீட்டிற்கு வந்தாள் மாளவிகா. விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பியதும் மாளவிகா ஜோதிகாவை தனியாக அழைத்துச் சென்று அவள் காதலிப்பது யாரையென்று கேட்டாள். மீண்டும் ஜோதிகா ‘காலம் வரும்போது சொல்லுகிறேன்’ என்று சொன்னாள். பொறுமையிழந்த மாளவிகா “உன் காதலன் எங்கள் மதுரையில்தான் இருக்கிறான் என்பது எனக்கு தெரியும்”
என்றவளின் கையைப் பிடித்து நிறுத்திய ஜோதிகா “எப்படி கண்டுபிடித்தாய்?” என்று
கேட்கவும் “எல்லாம் அந்த ஐபிஎஸ் வீட்டில் உன் பொம்மையைப் பார்த்துத்தான்”
என்று மல்லிகா பதில் சொல்லவும் மேலும் ஆச்சரியத்தில் விழுந்தாள் ஜோதிகா.
“அவன் IPS என்பதெப்படி உனக்கு தெரியும்? ஒருவேளை எனக்குத் தெரியாமல் என் டயரியைப் படிக்கிறாயோ? என்று சற்று கோபத்தோடு கேட்டாள். அதை கண்டு கொள்ளாத மாளவிகா தொடர்ந்து “அதுபற்றி பிறகு சொல்கிறேன். சென்னையில் இருக்கும் நீ எப்படி மதுரையில் உள்ளவனை பிடித்தாய்?” என்று கேட்கவும் ஜோதிகா “ஒரு வருடம் முன்பு மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நிகழ்ந்த ஒரு சின்ன சம்பவம் தான்” என்று சொல்லி “வா போகலாம்” என்று மேற்கொண்டு பேச்சைத் தவிர்க்கும் நோக்கில் நடக்க ஆரம்பித்தாள். அவள் கையைப் பிடித்து நிறுத்தி “முழுவதையும் சொல் ஜோதிகா. ஊமை மாதிரி இருந்து கொண்டு ஒரு வருடமாக என்னிடமே மறைத்திருக்கிறாய்” என்றதும் “சரி
சொல்லுகிறேன்” என்று வெட்கத்துடன் சொல்ல தொடங்கினாள். “அன்று மதுரையில் உறவினர் வீட்டு திருமணத்திற்காக காலையில் வந்தேன். இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸில் ரிசர்வ் செய்திருந்தேன். மாலை ஆறு மணியளவில் கோவிலுக்கு வந்தேன். தரிசனம் எல்லாம் முடித்து வெளியே வந்த போது மழை
கொட்டியது. இரயிலுக்கு நேரமாகிவிடுமே என்று பயந்து ஆட்டோ பிடிக்க முயன்றேன். ஆனால்  எந்த ஆட்டோவும் கிடைக்கவில்லை. அப்போது பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம் என் பயத்தை வாய் விட்டு புலம்பியிருக்கிறேன். அதைக்கேட்டு அங்கே நின்றிருந்த அவன் “நானும் ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான்
போகிறேன்- நண்பனை வழியனுப்ப. உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால் என்னுடன் வரலாம்” என்றான். பார்ப்பதற்கு நல்லவனாகவே தெரிந்தது.

இருந்தாலும் அறிமுகம் இல்லாத ஊரில் அறிமுகம் இல்லாத வாலிபனோடு போவதற்கு அச்சப்பட்டேன். ஆனால் வெளிக்காட்டவில்லை. பதிலும் சொல்லவில்லை. பத்து நிமிடம் பொறுத்து அவன் புறப்பட்டதும் “நானும் வருகிறேன்” என்று சொல்லி அவன் காரில் பின்  சீட்டில் ஏறிக்கொண்டேன். ஸ்டேஷன் சேரும்வரை பயந்துகொண்டே வெளியே பார்த்தபடியே வந்தேன்.
வழியில் இருவரும் ஏதும் பேசவில்லை. இறங்கும் போது தன் விசிட்டிங் கார்டை கொடுத்து ‘இனி பயம் இல்லாமல் போங்கள். சென்னை போய் சேர்ந்ததும் தகவல் சொல்லுங்கள். பை” என்று சொல்லிவிட்டு சென்றான். அவனது கண்ணியமும் மரியாதையும் அக்கறையும் என்னை மிகவும் ஈர்த்துவிட்டன.
சென்னைக்கு வந்ததும் போன் செய்து “நன்றி” சொன்னேன். “வெல்கம்” என ஒற்றை வரி பதிலோடு வைத்துவிட்டான். அதற்குப் பிறகும் அடிக்கடி அவன் ஞாபகம் வந்து கொண்டேயிருந்தது. பல முறை மொபைலில் அழைத்து நிறைய பேச முயற்சித்தேன். ஆனால் என்ன பேசுவதென்று தெரியாமல் “நன்றி” என்றே ஒவ்வொரு முறையும் சொன்னேன். ஒருநாள் அவன் “அடிக்கடி அழைத்து நன்றி சொல்கிறாயே? உன் அகராதியில் நன்றிக்கு வேறேதும் அர்த்தமுண்டோ?” என்று கேலியாகக் கேட்டான். ‘ஆம். அர்த்தமே காதல்தான்’ என்று பதில் சொல்லவேண்டும் என்று மனது ஆசைப்பட்டாலும் பாழாய்ப்போன வெட்கம் தடுத்தது. வெகு நாட்கள் இடைவெளிக்குப்பின் மிகுந்த தயக்கத்தோடு அன்றுதான் துணிந்து முதன் முதலாக அந்த பொம்மையை பரிசாக அனுப்பி என் எண்ணத்தை ஜாடையாக தெரிவித்தேன்” என்றாள்.
“பதில் வந்ததா?” என்று மாளவிகா கேட்டாள் “ஆம். இரண்டு நாட்கள் முன்புதான் அவனும் ஒரு பொம்மையை அனுப்பி தன் சம்மதத்தை சொல்லி விட்டான்” என்று முடித்தாள்.
மாளவிகா வெகு நிதானமான குரலில் “நீ காதலிப்பது சூர்யா IPSஐத்தானே?”என்றதும் “உனக்கு எப்படி தெரியும்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள். சூர்யா தனது அண்ணன்தான் என்று சொல்லிவிட்டு  விடுமுறையில் தன் வீட்டில் நடந்ததை விவரித்தாள் மாளவிகா.
“ஒரு நாள் என் அண்ணன் சூர்யா அதிசயமாக அவன் அறையில் இருப்பதைப் பார்த்துவிட்டு அவனைத் தேடி அவன் அறைக்குள் சென்றேன். அங்கே அவன் மேஜை மீது அன்று கடையில் நீ  தெரிந்தெடுத்த அந்த கிறிஸ்டல் பொம்மையைக் கண்டதும் திடுக்கிட்டேன். சுதாரித்துக்கொண்டு ஏதும் தெரியாதது போல் அவனிடம் “அண்ணா எப்பொழுது வாங்கினாய் இந்த பொம்மையை?  மிக நன்றாக இருக்கிறதே”எனக் கேட்டேன். அவன் ஓரிரு நாளைக்கு முன்புதான் வாங்கியதாக சொன்னதும் எனக்குத் ரியக்கூடாதென்று மறைக்கிறான் என்று புரிந்து கொண்டேன். கொஞ்சம் கூட தாமதிக்காமல் தடாரென “அண்ணா என்
கிளாஸ்மேட் ஜோதிகாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டதும்  “ஜோதிகாவா? யாரது? எனக்கு அவள் யாரென்றே தெரியாதே” என்று சொல்லிக்கொண்டு அவசரமாக டிரஸ் பண்ணிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் பேசிய விதத்திலிருந்தும் மடித்து வைக்கப்பட்டிருந்த கொரியர் கவரிலிருந்தும் அவன் பொய்தான் சொல்கிறான் என்று தெரிந்தது. சரி இங்கு வந்து உன்னிடமிருந்தே
முழுக்கதையையும் தெரிந்து கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.”

இதைக் கேட்ட ஜோதிகா, சூர்யா அவளது அண்ணன் என்று தெரிந்ததும் ஒரு பக்கம் அதிர்ச்சியும் இன்னொரு பக்கம் ஆனந்தமும் அடைந்தாள். ஜோதிகா முகத்தில் ஆவல் பொங்க  மாளவிகாவை அணைத்துக் கொண்டு “நல்லதாய் போயிற்று. நீயே எங்கள் காதலுக்கு பாலமாக இருந்து கல்யாணம்வரை ஏற்பாடு செய்ய வேண்டியது” என்று மகிழ்ச்சி பொங்க கூறினாள்.
சிரிப்பிலேயே சம்மதம் சொன்ன மாளவிகா  “ஆனால்  படிப்பு முடியும் வரை காத்திருக்க முடியுமா அண்ணியாரே?” என நகைத்தவாறே ஜோதிகாவோடு கை கோர்த்து வகுப்பில் நுழைந்தாள்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!