எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
தேர்வு செய்த படம்: படம் 2
ஒரு அழகிய காட்டுப்பகுதி. அடர்ந்த மரங்களும், தெளிந்த நீரோடைகளும், எழில் கொஞ்சும் பறவைகளும் நிறைந்திருந்த அக்காட்டில், அதிசய பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இயற்கையோடு இனணந்த அவர்களின் வாழ்க்கை, காட்டில் கிடைக்கும் அமுதசுரபியான பொருட்களைக்கொண்டே செழித்திருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அவர்களின் நம்பிக்கையும் அக்காட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது.
அந்தக் காட்டின் மையத்தில், ஒரு மாபெரும் கருங்கல்லால் ஆன அவர்களின் அதிசயக் கடவுள் வீற்றிருந்தது. தினமும் மாலை வேளையில், கனிந்த பழங்களையும், தூய தேனையும் கொண்டு அத்தெய்வத்தை வழிபடுவது அவர்களின் வாடிக்கை.
தங்கள் வாழ்வுக்கும், வளத்துக்கும் உறுதுணையாக இருக்கும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் நேரம் அது.
அன்றும் வழக்கம் போல, மக்கள் அனைவரும் கூடி, பக்திப் பரவசத்துடன் வழிபாட்டைத் தொடங்கினர்.
செம்மயமான மேகங்கள், வானெங்கும் படர்ந்து, ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்தின. அந்த ரத்தக் கலரில் காட்சி தந்த வானத்தைப் பார்த்து, மக்கள் அனைவரும் திடுக்கிட்டனர்.
அச்சமும், ஆச்சரியமும் கலந்த கண்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தனர். இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று தெரியாமல், “நம் கடவுள் கோபமாகிவிட்டார் போலும்!” என்று நினைத்து நடுங்கினர்.
தலைவன் வந்து, மக்களை அமைதிப்படுத்த முயன்றான். ஆனாலும், அவர்களின் மனதில் இருந்த அச்சம் நீங்கவில்லை. ஆனால், அந்த சிவந்த வானத்திலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வானின் உச்சியில், வெண்மையான நிலவு, ஒரு முத்து போல அழகாய் மிதந்து கொண்டிருந்தது.
அந்த ரத்தச் சிவந்த பின்னணியில், நிலவின் வெண்மை அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலைத் தந்தது. “இந்தக் காட்சியிலும் ஒரு பேரழகு இருக்கிறதே!” என்று வியந்தனர்.
அந்த இரவில், கிராம மக்கள் பயத்துடனே உறங்கினர். மறுநாள் விடிந்தபோது, வானம் வழக்கமான நீல நிறத்திற்கு மாறியிருந்தது. ஆனால், அவர்களின் மனதில் அந்தச் சிவந்த வானம் ஏற்படுத்திய பயமும், கேள்வியும் நீங்கவில்லை.
அன்று மாலை, ஞானம் வாய்ந்த மூதாட்டி ஒருவர், மக்களைக் கூட்டி, “குழந்தைகளே, நேற்று நாம் கண்டது கடவுளின் கோபம் அல்ல. அது ஒரு அரிய நிகழ்வு. சில சமயங்களில், வானில் உள்ள தூசித் துகள்களும், சூரிய ஒளியும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சந்திக்கும்போது, வானம் இப்படி சிவந்து காணப்படும்.
இது ஒரு அழகான இயற்கை நிகழ்வு. நம் கடவுள் நம்மை என்றும் காப்பார். நாம் பயப்படத் தேவையில்லை,” என்று விளக்கினார்.
அவள் மேலும், “இயற்கை சில நேரங்களில் நமக்கு அச்சுறுத்துவது போலத் தோன்றினாலும், அதில் ஒரு மறைந்திருக்கும் அழகு உண்டு.
நாம் அறியாத பல அதிசயங்கள் இந்த உலகில் இருக்கின்றன. அவற்றை நாம் தேடிப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், நம்பிக்கையை இழக்கக் கூடாது.
நேற்றைய சிவந்த வானம், நமக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. பயத்திற்குப் பின்னால், தெளிவும், அறிவும் இருந்தால், நாம் எதையும் எதிர்கொள்ளலாம். இந்தச் சிவந்த வானம், அறியாமையில் இருந்து அறிவை நோக்கிய நம் பயணத்தின் தொடக்கம்.
ஒவ்வொரு பயங்கரமான காட்சியிலும் ஒரு பேரழகு மறைந்திருக்கும், அதை நாம் பார்க்கும் கண்கள்தான் நமக்குத் தேவை,” என்றார்.
மூதாட்டியின் இந்த வார்த்தைகள் மக்களுக்குப் பெரும் நிம்மதியையும், தெளிவையும் அளித்தன. அந்தச் சிவந்த வானம், அவர்களுக்கு அச்சத்தை மட்டுமல்ல, இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் விதைத்தது.
அன்று முதல், அவர்கள் இயற்கையை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அதன் ஒவ்வொரு மாற்றத்தையும் உற்றுநோக்கவும் தொடங்கினர். சிவந்த வானம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது பயமல்ல, அது ஒரு புதிய விடியலின் ரகசியம்.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.