எழுத்தாளர்: இந்துமதி
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து பழகிய ராதா அதே போல் அன்றும் 5 மணிக்கு முழிப்பு வர அருகில் படுத்து தன் மேல் கால் போட்டு தூங்கும் 2 வயது மகன் ராகுலின் தூக்கம் கலையாமல் மெதுவாக காலை நகர்த்தி விட்டு எழுந்தாள். ராகுல் சிணுங்கிக் கொண்டே புரண்டான். தூக்கத்தில் அவனறியாமல் அப்பா என்றான்.
ராதாவிற்கு கோபம் கன்னாபின்னாவென்று வந்தது. இந்த பிஞ்சிற்கு நாம் என்ன தான் பார்த்து பார்த்து பாசமா கவனித்தாலும் தூக்கத்தில் கூட அப்பாவைத் தேடுதே என கண் கலங்கினாள்.
எழுந்து வெளியே வந்து மனதை அமைதிப் படுத்தி தினமும் செய்யும் யோகாவை செய்தாள். இந்த நாள் ராதாவின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று.அவள் விரும்பிய சுதந்திரம் கிடைக்கப் போகிறது. கணவர் என்ற உறவில் அவளை தன் இஷ்டத்திற்கு ஒரு பொம்மலாட்ட பொம்மை மாதிரி ஆட்டி வைத்த ரகுவிடம் இருந்து விடுதலை.
இன்று தான் அவளுக்கும் அவள் கணவர் ரகுராமனுக்கும் இடையே நடக்கும் டைவர்ஸ் கேஸ் தீர்ப்பு வரப் போகிறது. கோர்ட்டில் ஆர்டர் வாங்கிய உடனே ராகுலோடு எங்காவது வெளியூர் போய் இரண்டு நாட்களாவது தங்கி இதைக் கொண்டாடணும். இந்தக் குழந்தை போதும் இவனுக்காக இனி வாழணும்.
என் உணர்வுகளை என் தாய் தந்தைக்கே புரியலை. எதுக்கெடுத்தாலும் கோபப் பட்டு, ஆத்திரப்பட்டு இப்போ டைவர்ஸ் வரைக்கும் வந்தாச்சு. கொஞ்ச நாள் ஆறப்போடு. யோசி. அப்புறம் பேசிப் பார். அப்பவும் ஒத்து வரலையா? அப்போ டைவர்ஸ் கேளு ன்னு ஒரே அட்வைஸ். அதான் குழந்தையோடு தனியா வந்தாச்சு.
என்ன செய்யலாம் என மனதில் யோசித்தபடி குளித்துக் கிளம்பி ராகுலை எழுப்பி அவனையும் கிளப்பினாள் . வக்கீலை அழைத்தாள். மேடம் என் பையன் என்னோடு தான் இருக்கணும். எப்படியாவது ஏதாவது செய்யுங்க. உங்களுக்கு என்ன ஃபீஸ் கேட்டாலும் தரேன்.
நீங்க முதல்ல கோர்ட்டுக்கு வாங்க பார்க்கலாம் என்றாள் வக்கீல். போகும் வழியில் ராகுலிடம். வக்கீல் மாமா நீ யார் கிட்ட இருக்க விரும்பறேன்னு கேட்டா அம்மா கிட்ட ன்னு தான் சொல்லணும் என்று சொல்லிக் கொடுத்து அவனுக்குப் பிடித்த ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கிக் கொடுத்து தாஜா செய்தாள் . குழந்தை சரி என்றது.
சமர்த்தாக இவளுடன் வந்த குழந்தை ரகுவைப் பார்த்ததும் அவனிடம் ஓடியது. அவனும் தூக்கி வைத்துக் கொஞ்சினான். இவள் எத்தனை முறை கூப்பிட்டும் வர மறுத்தான். ராதாவின் கோபம் எல்லை மீறியது. இவளின் கோபத்தை பார்த்து ராதா பார்த்து நடந்துக்கங்க இது கோர்ட் அப்புறம் உங்களுக்கு இதுவே எதிரா போகும் என்று அவளின் வக்கீல் கண்டித்து கொண்டு இருந்தாள்
கோபத்தோடு அருகில் போனவள் அப்போது தான் ரகுவின் தோற்றத்தை கவனித்தாள் . பரிதாபமாக ஷேவ் செய்யாமல் தாடியோடு , கசங்கிய சட்டையை மாட்டிக்கொண்டு கண்களில் பொங்கி வழியும் நீரோடு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
அந்த நிமிடத்தில் அவளுக்குப் புரிந்தது அவனின் பாசமும், குழந்தையின் ஏக்கமும். ரகுவும் ஒரு வளர்ந்த குழந்தை போல அவளுக்குத் தோன்ற அம்மா சொன்ன வார்த்தைகள் காதில் மறுபடி மறுஒலிபரப்பு ஆக முதன்முதலாக தன் முன் கோபம் தவறென்று உணர்ந்து வக்கீலிடம் கேஸ் வாபஸ் என்றாள் . ரகுவோடு திரும்பி நடந்தாள் அவர்கள் வீட்டுக்கு.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: