இரயில் பயணங்களில்
இதுவரை எழுதப்பட்டவை எல்லாம்
உனக்காகவே
எழுதப்பட்டவையாய்
எண்ணுகிறாய்.
நீரும் -தீயும்
ஒரு போதும் ஒன்றிணையாது
ஏனோ
நம் மனம்
காதல் கொண்டது வீணோ ?!
நிலம் ,நீர் ,காற்று ,வானம் ,நெருப்பு போன்று
பஞ்சபூதங்கள் அல்ல
நம் காதல் என்றாய்.
சாதி ,மதம் ,மொழி ,இனம்
கடந்தது என்றாய்
ஏட்டில் எழுதியது
கரும்பலகையில் படித்தது
எல்லாம் பின்பற்ற
புத்தன் மகாத்மா பரம்பரையா என்ன ?
அடம் பிடித்து
அகிம்சை செய்தாலும்
கத்தி ,கத்தி
மனுதர்மம் போதித்தாலும்
இங்கு எவன் காதிலும்
விழப்போவதில்லை
மானை வீழ்த்தும் புலி
ஒரு போதும்
மிருகம் என்று சொல்லிக் கொள்வதில்லை
மனிதம் மறந்த
மனிதனும்
தான் மிருகம் என்பதை
காட்டிக்கொள்வதில்லை.
காதல்
வரலாற்றில் மட்டுமே
காவியமாக பார்க்கப்படுகிறது
நிஜத்தில் அல்ல.
நிஜ காதல்கள்
அன்றும் சரி
இன்றும் சரி
ஒன்று
இரத்தத்தால் எழுதப்படும்
இல்லை
யுத்தத்தால் முடிக்கப்படும்
நீ நீயாய்
நான் நானாய்
ஒரு தண்டவாளத்தை போல் இணையாமல்
ஒரு இரயில் பயணத்துக்கு உதவுவோமே!
எண்ணமும் -எழுத்தும்
நௌஷாத் கான் .லி
கும்பகோணம்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)