படைப்பாளர்: சக்தி லூர்துசாமி
அன்று நிறைமாதம் எனக்கு.
பொதுவாக கருவுற்ற காலத்தில் பெண்களின் மனதில் எண்ணற்ற (உவகை) மகிழ்ச்சிகள் நிறைந்து இருக்கும்.
ஆனால் என் மனமோ (மருட்கை) குழப்பத்தில் மூழ்கி இருந்தது.
மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் அவலம் நிறைந்து இருக்கும் இந்த ஊரில் துப்புரவு பணி புரிந்த என்னவன் விஷ வாய்வு தாக்கி இயற்கை எய்திய செய்தியை கேட்கும் போது தான் நான் கருவுற்ற செய்தியை நானே அறிந்து இருந்தேன்.
ஆண் துணை இல்லாமல் இனி என் மகள் எப்படி வாழ போகிறாள்..? என்று கவலை கொண்ட என் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக..
யார் துணை இல்லையெனினும், “நாமே நமக்கு துணை” என்று எண்ணி நானும் பலர் (இளிவிரல்) அருவருப்பாக பார்க்க கூடும் அதே துப்புரவு பணியில் வேலைக்கு சேர்ந்து என் வாழ்க்கையை
வழி நடத்த ஆரம்பித்தேன்.
குப்பையில் கை வைத்தால் தான் சோற்றில் கை வைக்க கூடும் என்ற நிலையில் கூட நான் அன்று அழகான பெண் பிள்ளையை ஈன்றெடுத்தேன்.
(வெகுளி) கள்ளம், கபடம் இல்லாத குழந்தையின் உருவத்தில் என்னவனை நான் மீண்டும் கண்டுகொண்டேன்.
என் பிள்ளையை பார்த்து,”ஆண் பிள்ளை பிறந்து இருந்தால் செலவு இருந்து இருக்காது, எதிர்காலத்தில் உனக்கு துணையாக இருந்து இருக்கும்”.. என்று என் பெற்றோர்கள் பேசும் சொற்களை கேட்டு வருத்தம் கொள்ளாத நான்.. பெண் பிள்ளை பிறந்ததை நினைத்து (பெருமிதம்)
பெருமை அடைந்தேன்.
என் குழந்தை வறுமையில் வளர்ந்த காரணத்தால் பணத்தின் மதிப்பை அறிந்து இருந்தாள்..
படிப்பிலும் கெட்டிக்காரியாக வளம் வந்த என் மகளுக்கு,தனித்திறமையாக பல குரலில் பேசும் திறனும், (நகை) பேச்சில் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருந்தது.
பள்ளியில் நடைப்பெற்ற எண்ணற்ற போட்டிகளில் கலந்துகொண்டு என் மகள் பரிசுகளை வாங்கி வரும் காட்சியைக் காண என்னவன் என்னுடன் இல்லையே என்ற கவலையும் எனக்குள் இருக்க தான் செய்தது.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல், எத்தனை தடைகள் வந்தாலும் என் மகளை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணிய எனக்கு பலம் சேர்க்கும் விதமாக நல்ல மதிப்பெண்ணை எடுத்து அவள் விருப்பப்பட்ட பாடத்தை மேற்கொண்டு படிக்க அவள்
முதல் நாள் கல்லூரிக்கு சென்ற நிகழ்வு இன்னும் என் நினைவில் உள்ளது.
சுற்றி இருக்கும் அனைவரையும் இன்முகத்துடன் அணுகும் என் மகள் சில நாட்கள் (அமைதி) மௌனமாக வலம் வந்தாள்.
என் மகளுக்கு படிப்பில் பிரச்சனையா? இல்லை படிக்கும் இடத்தில் பிரச்சனையா?என்று நான் குழம்பி போனேன்.
ஒரு நாள் “இனி நான் கல்லூரிக்கு போக போவது இல்லை, வீட்டிலேயே இருக்க போகிறேன்”.. என்று என் மகள் கண்ணீருடன் (அழுகை) வந்து என் முன் நின்றாள்.
பெண் பிள்ளைகளின் கண்ணீரை கண்டு (அச்சம்) பயம் கொள்ளாதவர்கள் எவரும் உண்டோ?
நானும் அதே அச்சத்துடன் என் மகளுக்கு என்ன தான் பிரச்சனை என்று விசாரிதேன்.
ஒன்றா இரண்டா…
வீட்டில் இருந்து வெளியே சென்ற நொடி முதல் மீண்டும் வீடு வந்து சேரும் வரை என் மகள் அனுபவிக்கும் இன்னல்களை கேட்டு என் கண்கள் கலங்கியது…
“பொட்டி கடையில் சிகைக்காய் வாங்க பணம் கொடுக்கும் போது கடைக்காரர் என் கையை சீண்டுவதில் ஆரம்பித்து, சாலையில் நடந்து போகும் போது பல காமப் பேய்கள் கண்ணில் இருந்து நான் தப்பித்து, பேருந்தில் தன் அரிப்பை தீர்த்து கொள்ள என் மேல் மோதும் பிணம்
தின்னி ஜென்மங்களை எல்லாம் கடந்து, படிக்க போகும் இடத்தில் பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே படுக்க அழைக்கும் அவலங்களை எதிர்த்து, சக மாணவர்கள் சிலர் இளைய தலைமுறைகளை நாசமாக்கும் இணைய தளங்களில் வயதுக்கு மீறிய விஷயங்களை பார்த்து அதை நடைமுறை படுத்த முயற்சி செய்து எனக்கே தெரியாமல் என்னை படம் எடுத்து மிரட்டி, என்னை அவர்கள் வீட்டுக்கு வர சொல்கிறார்கள். என்னால முடியல..ம்மா, நான் என்ன பாவம் செய்தேன்.? பெண்ணாக பிறந்தது பாவமா, அப்போ இவங்களுக்கு எல்லாம் பயந்து தான் நான் வாழணுமா? இல்ல இவங்க கூட போராட தெம்பு இல்லாம மூலையில் ஒடுங்கி கிடக்கணுமா? இல்ல இவங்க சொல்லுற மாதிரி அவங்க வீட்டுக்கு போகணுமா? எனக்கு என்ன செய்யிறதுனு தெரியல..ம்மா” என்று என் மகள் கதறி அழுவதை பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிந்தது.
“வா…ம்மா போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் பண்ணலாம்” என்று நான் என் மகளை அழைத்தும் கூட அவள் வர மறுத்து விட்டாள்.
“அவங்க எல்லாம் பெரிய ஆளுங்களோட பசங்க அம்மா, நம்மளால அவங்கள ஒண்ணுமே பண்ண முடியாது” என்று என் மகள் சொல்லும் வார்த்தையில் வலி நிறைந்து இருந்தது.
“அப்படி எல்லாம் இல்ல, சட்டம் எல்லோருக்கும் சமம்” என்று நான் சொன்ன வார்த்தையை கேட்டு வாய் விட்டு சிரித்த என் மகள்
“சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான்”…. இந்த வார்த்தையை கேட்கும் போது நல்லா தான் இருக்கு…. ஆனா அந்த வார்த்தைக்கு உயிர் இருக்கா….?கண்டிப்பா இல்லை….சில பணக்காரர்களும், சில அரசியல் புள்ளிகளும் சேர்ந்து நம்ம சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி எல்லா விதமான கேவலத்தையும் செய்து விட்டு, சந்தோஷமா
தில்லா வாழ்ந்துக்கிட்டு தானே இருக்காங்க..
ஏழைப் பெண்கள்… வேலைக்கு போகும் பெண்கள்….ஏன் படிக்க போகும் என்னை மாதிரி பெண்கள் என்று இங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கோ இல்லையோ.. அந்த பெண்களை நாசம் செய்யும் நபர்களுக்கு பாதுகாப்பு தர சில ஆளுங்க இருக்க தானே செய்றாங்க.
கோவில்ல வைத்து பெண் குழந்தை கற்பழிப்பு….. பள்ளிக்கு படிக்க போன பெண் குழந்தை சடலமாக வீடு திரும்பும் கதை…
train ஏற போன இடத்துல பெண்ணை வெட்டி கொலை பண்றது.. net சென்டர்ல பெண்ணை நிர்வாணமா படம் எடுக்குறது….குளிக்க போனா அங்க வீடியோ எடுக்குறது…துணி கடைக்கு போனா அங்கே படமே எடுக்குறது… பாடம் சொல்லி தர வேண்டிய சில ஆசிரியர்களே பெண்களை சப்ளை பண்றது…மாணவர்களுக்கு சில ஆசிரியர்கள் போன் பண்ணி என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா practical mark ல கை
வைக்க மாட்டேன்னு மிரட்டுறது… உஷ் அப்..பா.. இப்படி பெண்களின் அவல நிலையை சொல்லிக்கொண்டே போகலாம்….
நாளுக்கு நாள் இந்த மாதிரி அநியாயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது… நாமும் அதை கேட்டப்படி கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறோம்…இதுக்கெல்லாம் என்ன தான் தீர்வு..
பணம் படைத்தவர்கள்…. எங்களை உங்க சட்டம் ஒண்ணும் பண்ணாது…. என்று மேலும் மேலும் அநியாயங்களை செய்து கொண்டு தானே போகிறார்கள்..
மீடியா முதல் மீன் மார்க்கெட் வரை இந்த பண முதலைகள் என்ன சொல்கிறார்களோ அது தான் இங்கே நடைமுறை படுத்தப் படுகிறது…
இப்போது எல்லாம் பெண் பிள்ளைகள் என்று இல்லை, ஆண் பிள்ளைகளுக்கும் இதே அவலங்கள் தான் நடக்கிறது, யாரை குறை சொல்லி என்ன ஆகப்போகிறது…
பணம் இருந்தால் என்ன பாவம் வேணும்னாலும் பண்ணிட்டு… அந்த பாவத்தை பணம் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் தான் நாமும் வாழ்ந்து வருகிறோம்..
இதற்கெல்லாம் என்னதான் முடிவு…..காலம் காலமாக இதைப்பற்றி பேசிக் கொண்டும் விமர்சித்துக் கொண்டு இருக்கிறோமே தவிர…. இதற்கு ஒரு முடிவு என்பது இதுவரை வரவில்லை…. ஏன் இனியும் வருமா என்பது பெரிய கேள்விக்குறி தான்…..விடையில்லா வினாக்கள் எத்தனையோ இந்த உலகத்தில் இருக்கும் பட்சத்தில்… பெண்களின் கற்பை
சூறையாடியவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்குமா? என்று கேட்கும் வினாவிற்கும் இது நாள் வரை விடை கிடைக்காமல் தான் இருக்கிறது….. பல பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு இன்றும் விடை கிடைக்கவில்லை” என்று என் மகள் சொன்ன உண்மையில் அவள்
எதிர்காலத்தோடு சேர்த்து இனி பிறக்க போகும் பல்லாயிரம் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்து முதல் முறை எனக்கு அச்சம் ஏற்பட்டது.
இந்த கொடுமைகளுக்கு எல்லாம் என்ன தான் தீர்வு?
இனி பிள்ளைகளை படிக்கவோ வேலைக்கோ ஏன் வீட்டில் சொந்தங்கள் நடுவில் கூட வைத்து கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட காரணம் என்ன?
சில மக்கள் போதை மருந்துக்கும் பண ஆசைக்கும் அடிமையாகி பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடுவதை என்று தான் நிறுத்த போகிறார்கள்.
இப்போதெல்லாம் விலங்குகளுக்கு கூட வன்புணர்வு நடக்கிறது என்று கேள்வி படும் பொழுது எப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற பயம் தான் முதலில் எழுகிறது.
கல்வி மட்டுமே நம்மை காக்கும் கடவுள் என்று சொல்லி சொல்லி வளர்த்த என் மகள் இன்று பள்ளிக்கே போக மாட்டேன் என்று பயந்து அடங்கி ஒடுங்கி சிரிப்பை மறந்து உறவுகளிடம் சகஜமாக பழுகுவதை தவிர்த்து நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்கும் பெண் பிள்ளைக்கு நான்
என்னவென்று தைரியம் சொல்லுவது.
இன்று நான் தைரியம் சொல்லி அவளை வெளியே அனுப்பி வைத்த பின்பு அவள் மீண்டும் வீடு வருவாளா? இல்லையா? என்ற அச்சத்தில் நாளெல்லாம் பயந்து பயந்து வாழ்வதை விட என் கண்
எதிரில் என் மகள் வீட்டுக்குள் நடைபிணமாக இருக்கிறாள் என்ற நிம்மதி மட்டும் தான் இன்று என்னிடம் மிஞ்சி இருக்கிறது.
அன்பர்களே.
நவரசம் அடங்கிய வாழ்க்கையில் ஏனோ பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு மட்டும் அச்சம் என்ற சொல் மட்டுமே நிரந்தரமாக தங்கி விடுகிறது?
காலத்துக்கும் அச்சத்துடன் தான் நம் பிள்ளைகளும் நாமும் வாழ வேண்டுமா?
இதற்கு தீர்வு என்பதே கிடைக்காதா?
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..
என்று மகாகவி பாரதியார்
பாடிய பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் வீரம் எழுகிறது என்னவோ உண்மை தான்.
ஆனால் “வன்புணர்வு” என்ற சொல்லை கேட்டு பெண் பிள்ளைகளை மட்டும் இல்லை, ஆண் பிள்ளைகளை மட்டும் இல்லை,வீட்டில் செல்லப் பிராணிகளையும் விலங்குகளையும் வளர்க்கும் அனைவர்க்கும்
இக்கால கட்டத்தில் அச்சம் மட்டுமே ஏற்படுகிறது என்பதுதான் உண்மை..
தவறு செய்தால் உயிர் போகும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஏற்பட்டால் தான் இனி எதிர்காலத்தில் நம் பிள்ளைகளின் வாழ்கை நவரசங்களும் அடங்கிய நல் வாழ்க்கையாக அமையும்…
முற்றும்.