படைப்பாளர்: சங்கர்
குர்ரம் பார்க்கின் புல் தரை ஜனவரி மாத குளிரினாலும், அன்று மாலை நீர் தெளித்த மலையாளத்தானின் தாரளத்தாலும் வழக்கத்தைவிட அதிகமாக சொதசொதப்பாக இருந்தது.
இன்று வியாழன் இரவு என்பதால் (மஸ்கட்டில் வெள்ளி வாரந்தர விடுமுறை) பார்க்கில் சற்று அதிகமாக கூட்டம் இருந்தது. பார்க்கை ஒட்டி வண்ண ஒளிகளை வீசிக்கொண்டு ஏராளமான மால்கள், ரெஸ்டாரன்ட்கள், எலக்ட்ரானிக் ஷோரூம்கள்..இதற்கெல்லாம் சம்மந்தமில்லாதபடி
பார்க்கின் இருண்ட மூலையில் அமர்ந்து பையிலிருந்த அன்று காலை வந்திருந்த அவன் மனைவி உஷாவின் கடிதத்தை பிரித்து மூன்றாம் முறையாக படிக்க ஆரம்பித்தான். உஷா அவனின் புது மனைவி எழுதும் முதல் கடிதம்! முதல் கடிதம் இவ்வளவு சீக்கிரம் வருமென
எதிர்பார்க்கவில்லை, அதுவும் கொஞ்சம்கூட ரொமான்டிக்காக இல்லாமல் போய்விட்டதே என்று வருந்திய அடுத்த நொடியே ‘ சே சே ரொமாண்டிக்கா இருக்க வேண்டும்னுதானே அவள் எழுதியிருக்கிறாள்” என்று தன்னைத்தானே திருத்தி கொண்டான். அவன் ஒரு மாதம் முன்பு நடந்த அவர்களின் அவசர கல்யாணத்தையும், அன்றிரவு அவளுடன் நடந்த
விவாதத்தையும் நினைவு கூர்ந்தான். அதிலும் அவன் மஸ்கட்டுக்கு அவளை கூட்டிபோகமுடியாத நிலையை அவளுக்கு யாரும் தெரியபடுத்தவில்லை என்று கூறியது அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது. ஒருவாறாக அவன் பார்க்கும் க்ளார்க் வேலைக்கு ஃபாமிலி
விசாவெல்லாம் கிடைக்காது என்றும் அவன் பாச்சிலர் ஸ்டேடஸ்லதான் இருக்க வேண்டுமென்ற நிலைமையை அவளுக்கு விளக்கி, அவன் வருஷத்துக்கு ஒரு முறை ஒரு மாத லீவில் வருவான் என்றும் ஆறுதலாக கூறினான். மேலும் இந்தமாதிரி இருப்பதால் அதிகமாக சேமிக்க முடியுமென்றும் கொஞ்சம் பல்லை கடித்துக்கொண்டு ஐந்து வருஷம் ஒட்டிவிட்டால் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரியால் சேமிக்கலாம் என்றும் பெருமிதத்துடன் சொன்னான். அவள் மௌனமாக இருந்தாலும் அவள் சமாதானமாகவில்லை என்று அவள் முகம் காட்டியது. மறு
நாள் அவனை மஸ்கட்டுக்கு வழியனுப்ப ஏர்போர்ட் வந்தபோதுகூட அவள் கண்ணீரும் கம்பலயுமாதான் இருந்தாள். கடைசியில் ஏர்போர்ட் உள்ளே நுழையும் முன் அவனை கட்டிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதது அவன் நெஞ்சை உருக்கியது. இதோ இப்போ இந்த கடிதத்தில் அவள் எழுதிய எழுத்துக்கள் அவனை அப்படியே புரட்டிபோட்டுவிட்டது.
சேகர் கடிதத்தை மீண்டும் படிக்கலானான்:
“ டியரஸ்ட் சேகர்
நீங்கள் இந்த கடிதத்தை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இதை படித்ததும் உங்களுக்கு பெரிய அதிர்ச்சியோ கோபமோ ஏற்படலாம். நான் இதை உங்களை ஏர்போர்ட்டில் வழிஅனுப்பிய உடனேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். இதிலுள்ளதை எல்லாம் உங்களுடன் நேரிலேயே பேச நினைத்தேன் ஆனால் அதற்கு சரியான வாய்ப்போ, நேரமோ கிடைக்கவில்லை. ஒரு வகையில் இதுவும் நல்லதுதான் ஏனென்றால் பேசும்போது எல்லாவற்றையும் ஓப்பனாக பேசமுடியாது.
மேலும் எழுதும்போது நாம் சொல்ல வந்ததை சொல்லவிடாமல் யாரும் குறுக்கிட முடியாதல்லவா?
சேகர், நான் உங்களை பேர் சொல்லி அழைக்கலாமில்லையா? இன்னும் சொல்லப்போனால் எனக்கு “டேய் சேகர்”னு செல்லமா கூப்பிடணும்னு கூட ஆசைதான். இதுமட்டும்தானா, கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருக்கணும்னு எத்தனையோ கனவுகள் கண்டிருக்கிறேன்.
நமக்குள் நல்ல நெருக்கம் வேண்டும் புரிதல் வேண்டும் நட்பு வேண்டும் கண்டிப்பாக அளவற்ற காதல் வேண்டும். கண்ணதாசன் அழகாக சொன்னாரே” நாளோடும் பொழுதோடும் உறவாடவேண்டும்”னு. எனக்கு இந்தமாதிரி பாடல்களை நாம் ஊட்டி கோடை மாதிரி இடத்திற்கு போய் சினமாவில் வர மாதிரியே வாய்விட்டு பாடி ஆடி விளையாடவேணும்னு
ரொம்ப ஆசை. இன்னும் எண்ணற்ற ஆசைகள்..நாமிருவரும்மட்டும் தனியாக குடித்தனம் நடத்தவேண்டும்..அது ஊருக்கு ஒதுப்புறமா ஒரு குடிசையா இருந்தால் கூட பரவாயில்லை..
நாள் பூரா நீங்க என்னை சீண்டனும்…கொஞ்சனும்..நான் சமயலறையில் இருக்கும்போது திடீர்னு பின்பக்கமா வந்து என்னை கட்டி தூக்கி கட்டிலில் கிடத்தணும்.. ” சீ சீ எப்ப பாத்தாலும் இதுதானான்னு நான் பொய்யா கோபித்து ஆனால் உண்மையா அனுபவித்து உறவு கொள்ளவேண்டும்.. இன்னும் எத்தனையோ கற்பனைகள்..கல்யாணத்திற்கு பிறகு
இப்படியெல்லாம் இருக்கணும்னு உங்களுக்கு தோன்றியதில்லையா? இப்படிஎல்லாம் கல்யாணத்திற்கு 5 வருடங்கள் பிறகு இருக்கமுடியுமா? பருவத்தேதானே பயிர் செய்ய வேண்டும்? இந்த சிலவருடங்களில் கிடைக்கும் லக்ஷ்சங்களை நீங்கள் பார்க்கறீர்கள் நானோ
இதில் ஏற்படும் சந்தோஷங்களின் இழப்பை பார்க்கிறேன். உங்களுடைய லக்ஷங்களால் இந்த நாட்களை.. நிமிடங்களை திரும்ப பெறமுடியுமா? சேகர், சந்தோஷமான வாழ்க்கையை வெறும் பணத்தால் மட்டும் ஏற்படுத்தமுடியாது.. நான் ஒரு மிடில் கிளாஸ்..எனக்கு வறுமை
ரொம்பவே பழக்கம்..என் அப்பாவின் சொற்ப மாதந்திர சம்பளத்தில் குடும்பத்தை நடத்த என் அம்மா பட்ட கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். மாதக்கடைசியில் அத்தியாவசமான செலவுகளை கூட ஒத்திபோட்டு வயத்தை கட்டி வாய கட்டி மாதத்தை ஒரு மாதிரி கழுத்தபிடித்து தள்ளி, முதல் தேதியன்று அப்பா சம்பள கவர், பூ, ஸ்வீட் பாக்கெட் கொண்ட
ஃபிரீப் கேசை வாங்கும்போது என் அம்மாவின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சி , எதோ இமாலய சாதனை புரிந்தால்போல உள்ள பெருமிதம்.. ஆம் சேகர் பணப்பற்றாக்குறையை சமாளிப்பது கூட ஒருவிதமான த்ரில்..ஒரு விதமான பெருமைதான்..
சேகர்..அன்று நீங்கள் சேமிப்பு கணக்கையும், எதிர்கால திட்டங்களையும் சொல்லும்போது உங்கள் குரலில் தெரிந்த ஆவேசம் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.. ஏனென்றால் பணமும் ஒரு விதமான போதைதான்.. அதற்கு நாம் ஒருபோதும் அடிமையாக கூடாது..எப்போ
ஒருவனுக்கு போதும் என்ற மனம் வரவில்லையோ அவன் எப்போதும் திருப்தி அடைய மாட்டான் இன்றைக்கு லக்ஷத்தை எதிர்பார்த்து அதை அடைந்தவன் அதை நாளை எப்படி கோடி ஆக்கலாம் என்ற வெறி அடைவான். இதில் அவன் இன்றைய சந்தோஷத்தை பலி
கொடுக்கிறான். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அந்த நாளை என்றுமே வராது.
உங்களுக்கு வைதீகனின் வெத்திலை கதை தெரியுமா? வைதீகனுக்கு தினமும் வெத்திலை பழம் காணிக்கையாக கிடைக்கும்..அனால் அவன் அன்று கிடைத்த துளிர் வெத்திலையை, ஒரு வேளை நாளை ஒன்றுமே கிடைக்காதோ என்ற பயத்தில், மறு நாளுக்கு வைத்துவிட்டு முதல்
நாள் கிடைத்த காய்ந்த வெத்திலைய போடுவானாம். இப்படியே அவன் வாழ்க்கை பூரா காய்ந்த வெத்திலைய போடுவானே தவிரே ஒரு நாள் கூட துளிர் வெத்திலையை அனுபவிக்கமட்டான்..ஏனென்றால் அவன் நாளைய விருந்திற்காக இன்று பட்டினி கிடக்கிறான். ஆனால் சேகர்.. நாளை என்பது மாயை..கானல் நீர் போன்றது..
இன்று..இப்போது..இந்த நொடி..இதுதான் நிஜம்.. சத்தியம்.. எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு.. நாளை என்று சொல்லும்போதெல்லாம் “பொழைச்சுகிடந்து”ன்னு கூட சொல்லுவோம்.. “பொழைச்சுகிடந்தால் நாளைக்கு தீபாவளி, பொழைச்சுகிடந்தால் நாளைக்கு ஊருக்கு போகணும்” இப்படித்தான் பேசுவோம். நான் சின்னவளாக இருக்கும்போது’ இதற்கு
என்ன அர்த்தம்னு பாட்டியிடம் கேட்டேன்” அதற்கு பாட்டி “ நாளைக்கு நான் இதை பண்ணுவோம்னு சொன்னா சாமி கோவிச்சுக்கும் எவ்வளவு திமிரா பேசரான் பாரு அவனை இன்னிக்கே இங்கே கொண்டு வந்துடுன்னு சொல்லிடுவார். ஆனால் நாமே பொழைச்சுகிடந்துன்னு சொல்லிட்டா சாமி இரக்க பட்டு பாவம் அவனை விட்டுட்டுன்னு சொல்லிடுவார்னு சொன்னாள். அந்த வயசுக்கு அது கன்வின்சிங்கா இருந்தது. அப்புறம்
பெரியவளானபிறகு தான் இதன் உண்மை தத்துவம் புரிந்தது..அதாவது நாளை என்பது எவ்வளவு அன்சர்டன்னு,நாம நிமிஷத்துக்கு நிமிஷத்துக்கு தெரிஞ்சுக்கனும்.
தெரிஞ்சுகொண்டால் இன்றைய வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்! அதனால சேகர் நாம் இன்று வாழ்வோம் ஏனென்றால் நாளை நமதல்ல! நான் சொல்லவேண்டியதை கொட்டி தீர்த்துவிட்டேன். இனி உங்கள் விருப்பம்.
வித் லாட்ஸ் ஆஃப் லவ்
உஷா
கடிதத்தை மடித்து பைக்குள் வைத்தான். இத்துடன் மூன்று தடைவை படித்துவிட்டான். அவளுடைய எழுத்துக்கள் அவனை சம்மட்டியாய் தலையில் அடித்தன. அவளுடைய கேள்விகள் சுளீர் சுளீரென சவுக்கடியாக அவன் மேல் விழுந்தது. ‘ மை காட் சாதுவாக தோன்றியவளுக்குள் இவ்வளவு உணரச்சி பிழம்பா? சேகர் வியந்தான். கடந்த இரண்டு மணி
நேரமாக அவள் எழுதியதை மெதுவாக மனதுக்குள் அசை போட்டு பார்த்த போது அதிலுள்ள அப்பட்டமான உண்மைகள் குத்தூசியாய் அவனுள் ஏறின. அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தது போல் விருட்டேனே நிமிர்ந்தான். மணி பார்த்தான்..இரவு 10..இந்தியாவில் 11:30
ஆகியிருக்கும்.. உஷா தூங்கியிருப்பாள்..எழுப்பலாமா இல்லை நாளை காலை போன் செய்யலமா என்று ஒரு கணம் யோசித்து.. நல்ல செய்தியை உடனே சொல்லிவிடலாமென தீர்மானித்து செல் போன் எடுத்து அவள் நம்பரை அழுத்தினான்.. சிறிதுநேர ரிங்கிற்கு பிறகு
உஷா எடுத்து பதட்டத்துடன் “ ஹலோ என்னாச்சு இவ்வளவு லேட்டா.. உடம்பு சரியில்லையா இல்லை வேறு எதாவது ப்ரச்சினையா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
“ ஹலோ உஷா . எல்லாம் சரியாதான் இருக்கு..உன் லெட்டர் கிடைச்சது..”
“ ம் ம் கோவமா? அதுக்காகத்தான் பாதி ராத்திரி போன்பண்ணி கத்த போரீங்களா..எதோ ஒரு வேகத்திலே எழுதி அனுப்பிட்டேன். அப்புறம் யோசிச்சு பார்த்தபோ அப்படி கடுமையா எழுதியிருக்க வேண்டாமோன்னு தோனித்து. நான் போன் பண்ணி மன்னிப்பு கேட்கலாம்னு
கூட நினைச்சேன்..ப்ளீஸ் சேகர் கோவிச்சுக்காதிங்க ஐயாம் வெரி சாரி”
“ ச்சே ச்சே உஷா நீ ரொம்ப கரெக்ட்டா தான் எழுதியிருக்கே..நான்தான் தப்பு
பண்ணிட்டேன்..எனிவே என் கண்ணை திறந்ததுக்கு நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்…”
“ நிஜமாவா?”
“ ஆமாம்..நிஜம்தான் அதுமட்டும் இல்லை.. நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு திரும்பி இந்தியாவுக்கு வரலாம்னு முடிவெடுத்துட்டேன்..”
“ அப்படியா நெஜமாவேதானா இல்லே நான் எதாவது கனவு காண்கிறேனா?”
“ ஹலோ கனவெல்லாம் ஒண்ணுமில்லை”
“ எப்போ வரப்போறீங்க?” உஷா குரலில் ஒரு சந்தோஷ உற்சாகம் தெரிந்தது
“ உடனேயே.. முடிஞ்சால் நாளைக்கே கூட கிளம்பிடலாம்னு ..சாரி.. பொழச்சுகிடந்தா நாளைக்கே வரலாம்னு இருக்கேன்”
“ கிண்டல் பண்ணாதீங்க கொஞ்சம் வெளையாடாம சீரியசா பேசுங்க ப்ளீஸ்”
“ ஹலோ பாதிராத்திரி உன்னை எழுப்பி விளையாடுவேனா? சீர்யஸா தான் சொல்றேன்..”
“ ஒ அப்பிடியா?.. இப்பவே ஒரு முத்தம் கொடுக்கனும்போல இருக்கு..ஆமா உங்க பத்தாயிரம் ரியால் குறிக்கோள் என்னாச்சு?”
“ பத்தியா இப்போ நீ என்னை கிண்டல் பண்றே..பத்தாயிரம் ரியாலெல்லாம் இப்போ நீ தரபோற முத்தத்துக்கு ஈடாகுமா?
“ சரி..சரி ரொம்ப வழியாம உடனேயே வந்து சேருங்கள்..”
“ ஓகே பை நாளைக்கு பார்க்கலாம்“
“ பொழைச்சு கிடந்துன்னு சொல்லுங்க”
இதை கேட்குமுன் அவன் போனை துண்டித்துவிட்டு பார்க்கை விட்டு வெளியேறினான்.
அவன் மனம் இப்போது ரொம்ப தெளிவாகவும், நிம்மதியாகவும் இருந்தது.
‘நாளை காலை அவன் பாஸை பார்த்து ரெசிக்னேஷன் லெட்டர் குடுத்து உடனேயே ரிலீவ் பண்ண சொல்லனும். பாக் பண்ணனும். பிரெண்ட்ஸ் கிட்டேயெல்லாம் சொல்லிக்கணும்.
நிறைய வேலையிருக்கு” என்று எண்ணிக்கொண்டே பார்க்கை ஒட்டிய மெயின் ரோடுக்கு வந்தான். ரூவிக்கு போவதற்கு ரோடை கிராஸ் பண்ணி எதிர்த்தாற்போல் போகவேண்டும்.
இரண்டு பக்கமும் கார்கள் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்தவண்ணம் இருந்தன.
கிட்டத்தட்ட ஐந்து நிமிஷமாயும் கிராஸ் பண்ணமுடியவில்லை. சேகர் பொறுமை இழந்தான்.
சப்வேக்கு ரொம்ப தூரம் நடக்கணும். போகலாமா என்று யோசிக்கும்போது ட்ராபிக் நன்றாக குறைந்து ஒரே ஒரு கார் மட்டும் பாஸ்ட் லேனில் வந்துகொண்டிருந்தது. ரோடை பாதி கிராஸ்
செய்து கொஞ்சம் வெயிட் பண்ணி அந்த பாஸ்ட் லேன் கார் போனபிறகு அடுத்த பக்கத்துக்கு தாவலாம்னு முடிவு செய்து அவசரமாக ரோடில் இறங்கி இரண்டாவது லைனின் மத்தியில் நின்றான். ‘ஒ இதென்ன அந்த பாஸ்ட் லேன் கார் திடீரென இரண்டாவது லேனுக்கு மாறுகிறது
?’ சேகர் கொஞ்சம் தடுமாறி மீண்டும் பிளாட்பாஃர்முக்கே திரும்புவதா இல்லை ஓடி அடுத்த முனைக்கு போய்விடுவதா என்று ஒரு கணம் யோசித்து எதிர்பக்கம் ஓடினான். அதே குழப்பத்தில் இருந்த டிரைவரும் அதே திசையில் காரை திருப்பினான். நூறு கிலோமீட்டர்
வேகம், பாலத்தின் சரிவு, டிரைவரின் தாமதமான ரிஃப்ளக்ஸ் ஆக்க்ஷன், இதெல்லாம் காரின் சடன் பிரேக்கை முற்றிலும் முறியடித்தன. சுமார் இருபது அடி உயரம் தூக்கி எறியப்பட்டு பந்தாக சுழன்று ரத்தகுழம்பாய் கீழே விழுந்த சேகருக்கு எல்லாமே ஒரு பளிசென்ற மின்னலைபோன்று தோன்றியது. அந்த ஒரு நொடியில் விவரிக்கமுடியாத பீதி..உருவமில்லாத
அருவமாய், ஆனால் எங்கேயோ ஒரு மூலையில் அணையப்போகும் விளக்குபோல் ஒரு உணர்ச்சிப்பொறி. சுற்றிலும் கூட்டம் சேர்ந்தது. அதிலிருந்து ஒரு தமிழ் குரல் மட்டும் அவன் காதில் சன்னமாக எதிரொலித்தது ‘ஐயோ பாவம் ..நம்மூர் பையண்டா.. ப்ளட் மணி
பத்தாயிரம் ரியால் கொடுப்பாங்க.. ஆனா இந்த சின்ன வயசு உயிருக்கு இந்த விலை போறுமா?”..
சேகர் சக்தியெல்லாம் திரட்டி “ ஐயாம் சாரி உஷா” என்று அலறினான் ஆனால் குரல் எழும்பவில்லை. அவன் உணர்விழந்தான்…
முற்றும்.