நவரச போட்டிக் கதை: வாடகை சைக்கிளும் தேன்நிலவும்

by admin 2
104 views

சரவணனிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. எதிர்வரும் ஞாயிறன்று எங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் நூறாவது பிறந்த நாளன்று குடும்பத்தோடு சென்று வணங்கி ஆசி பெறப் போகிறானாம். என்னையும் வருகிறாயா என்று கேட்டதற்கு “அவசியம் வருகிறேன்” என்றேன்.
அதே நேரம் வாயிலிலிருந்து “தாத்தா. நேரமாகிறது.வா. சைக்கிள் ஓட்டலாம்” என்ற எனது ஆறு வயது பேரன் அழைத்தது சரவணன் காதிலும் விழ, அவன் சிரித்துக்கொண்டே “என்ன ராஜா, உன் பேரனும் உன்னைப்போல் சைக்கிள் பைத்தியமோ” என்று கேட்டு தொலைபேசியை வைத்தான்.
மனப் பூங்காவில் மலரும் நினைவுகள் வட்டமடிக்க தொடங்கின.
ஆம். இதேபோன்று சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன்பு எங்கள் 
பள்ளியிலிருந்து பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருந்தது. அதைப் பார்த்ததுமே இப்போதுபோல் பழைய நினைவுகள் மனதில் மேகக்கூட்டங்கள் வானில் வேகமாக ஓடுவதைப்போல் ஓடின. உடனே எப்போதும் இணை பிரியாத சரவணன் உள்ளிட்ட ஐவரின் நினைவு வந்தது. அவர்களை அழைத்துப் பேசி எங்கள் பேட்சின் 25வது ஆண்டு என்பதால் கட்டாயம் பங்கு கொள்வோம் என்று முடிவு செய்தோம். அந்த நாட்களில் நடந்த பல வேடிக்கையான நிகழ்வுகளைப்பற்றி ஏராளமாக பேசி மகிழ்ந்தோம்.
எங்கள் கிராமம் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இயற்கை வளமிக்க சிற்றூர்.அங்கிருந்த ஒரே தனியார் பள்ளியில்தான் அனைவரும் எட்டாம் வகுப்பு வரை படித்தோம். எட்டாம் வகுப்பில்தான் நாங்கள் ஆறு நண்பர்களும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டோம்.அதனால் பெரும்பாலும் வாடகை சைக்கிளில் சுற்றுவோம். விடுமுறை நாட்களில் நாங்கள் ஆறு பேரும் மூன்று
சைக்கிள்களில் டபுள் பெடல் போட்டு தூத்துக்குடி சென்று இரவு காட்சி
திரைப்படங்கள் பார்த்துவிட்டு வருவோம். ஓரிரு  சமயங்களில் டபுள்ஸ்
போனதற்காகவும் (அப்போது டபுள்ஸ் போவது குற்றம்)லைட் இல்லை
என்பதற்காகவும் போலீஸில் பிடிபட்டு கெஞ்சிக் கூத்தாடி ஊர் வந்து சேர்ந்ததையும் இன்று நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது.
அப்படி ஒரு நாளில் நடந்ததுதான் இது.
அன்று காலை சைக்கிளில் பள்ளிக்கூட வாசலில் நுழையும்போது “பாட்டு பாடவா” என்று பாடிக் கொண்டே வந்தேன். பக்கத்திலேயே  என் கிளாஸ்மேட் சுசீலாவும்  சைக்கிளில் வந்தாள்.  அவள் என்னைப் பார்த்து
முறைத்ததற்கு நான் சிரித்தேன்- பின்விளைவை அறியாமல்.
வகுப்பு ஆரம்பித்ததுமே வகுப்பாசிரியர் சூரியன்—அவர் தன் பெயருக்கேற்றபடியே ரொம்ப சூடானவர்- என்னை வெளியே அனுப்பி முட்டி போட சொன்னார். காரணம் தெரியாமல் அவரை எதிர்த்து கேட்கவும் முடியாமல் வெளியில் சென்று முட்டி போட்டு நின்றேன்.(அது அந்த காலம்) அடுத்த பீரியட் எடுக்க வந்த தமிழ் ஆசிரியர் சந்திரன்—அவர்
பார்வையிலும் குளுமை, பழகுவதிலும் இனிமை- “ஏன் வெளியே முட்டி போட்டு நிற்கிறாய்? என்ன தவறு செய்தாய்?”  என்று கேட்க “தெரியவில்லை ஐயா” என்றேன்.
அப்போது வெளியே வந்த ஆசிரியர் சூரியன், தமிழாசிரியரிடம்   “இவனை உள்ளே சேர்க்காதீர்கள். இந்த வயதில் உடன் படிக்கும் மாணவியை ‘பாட்டு
பாடவா’ என்று பாடி கேலி செய்கிறான்”  என்று என்னைப் பார்த்தார். அவர் கண்களில் இன்னும் நெருப்பு இருப்பதை கண்டேன்.
“ஸார். நான் சுசீலாவைப் பார்த்து பாடவில்லை. நேற்றிரவு தூத்துக்குடி சென்று ‘சார்லஸ்’ தியேட்டரில் ‘தேன்நிலவு’ என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் ஜெமினி கணேசன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இந்த பாடலை பாடினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத்தான் நானும் சைக்கிளில் வரும்போது பாடினேன்”  என்றேன்.

என் பதிலைக் கேட்டதும் சூரியன் சார் முகம் சூடு தணிந்து சந்திரன் ஆகிவிட்டது. ( அவர் ஒரு தீவிர ஜெமினி கணேசன் ரசிகர் என்பது பின்னொரு நாளில்தான் தெரிந்தது).
சிரித்தபடி “சினிமா பாடல் பாடுவதையெல்லாம் பள்ளிக்கு  வெளியே
வைத்துக்கொள். பள்ளிக்குள் வேண்டாம். அதுவும் மாணவிகளைப் பார்த்து
பாடக்கூடாது” என்று சொல்லிவிட்டு “வகுப்புக்கு போ” என்று முதுகில் செல்லமாக தட்டினார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நானும் சுசீலாவும்  பார்த்துக் கொண்டதும் இல்லை; பேசிக்கொண்டதும் இல்லை.
25 ஆண்டுகட்குப் பிறகு அவள் எப்படியிருக்கிறாளோ?
எங்கே இருக்கிறாளோ? ஒருவேளை அவளும் இந்த விழாவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்த்தேன். குறிப்பிட்ட அந்த நாளில் நாங்கள் ஆறு நண்பர்களும் அருகருகே அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு–
“இப்போது நம் பள்ளி பழைய மாணவன் ராஜா “பாட்டுப் பாட வா” என்ற பாடலை பாடுவார்” என்று தலைமையாசிரியர் சூரியன் அறிவித்தார்.
வெட்கத்தில் தயங்கிய ராஜாவை நண்பர்கள் ஐவரும் சேர்ந்து மேடையில் ஏற்றி விட்டனர்.
ராஜா பாட ஆரம்பித்ததும் ஒலி பெருக்கியில் “ராஜாவோடு இணைந்து பாட நம் பள்ளியின் பழைய மாணவியும் இன்றைய ஆசிரியையுமான இசைக்குயில் சுசீலாவை அழைக்கிறோம்” என்றார் தமிழாசிரியர் சந்திரன். வியப்போடு பார்த்திருந்த ராஜாவினருகே வந்த சுசீலா மெதுவாக ‘ஸாரி ராஜா’ என்று சொல்லிவிட்டு பாடலை தொடர்ந்து பாடினாள். இருவருமாக முழு பாடலையும் பாடி முடித்ததும் எழுந்த கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆயின. இரவு உணவின்போது சிரிப்பும் கிண்டலும் கேலியுமாக ராஜாவும் நண்பர்களும் சுசீலாவும் மீண்டும் மாணவர்களாகவே மாறிவிட்டனர். ஆசிரியர்கள் சூரியனும் சந்திரனுங்கூட இளைஞர்களாகிவிட்டனர்.
அப்போது ராஜா “நல்ல காலம். சூரியன் ஸார் ஜெமினி ரசிகரானதால் அன்று நான் தப்பித்தேன். இல்லாவிட்டால் அவரும் சுசீலாவும் சேர்ந்து என்னை போக்ஸோ சட்டத்தில் உள்ளே தள்ளியிருப்பார்கள்” என்றதும் சுசீலாவுடன் சேர்ந்து அனைவரும் சிரித்தனர்.
அதற்குப் பிறகு ஆசிரியரையும் பழைய நண்பர்களையும் மீண்டும் சந்திக்க இது ஒரு வாய்ப்பு என்று பூரிப்படைந்தேன்.
ஞாயிறன்று ஆசிரியர் சூரியனை வணங்கியபோது அவர் சிரித்தபடி
“நீ பாட்டு பாட வா ராஜாதானே” என்று கூறி ஆசி வழங்கினார்.
நானும் “அதே ராஜாதான் ஸார். ஆனால் இப்போது முட்டி போட முடியாது” என்று சொல்லும்போது “ஆமாம், ஆமாம்” என்று கூறிக்கொண்டே எழுந்து வந்தாள் சுசீலாவும் அனைவரின் நகைப்புக்கிடையே.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!