படம் பார்த்து கவி: அந்திப்

by admin 3
17 views

அந்திப் பொழுதில்
அறமற்ற போர்
அரவமின்றி அரங்கேறுகிறது
ஒளிக்கும் இருளுக்கும்
தன்னை வாளாக்கி
வெல்ல விழைகிறது மெழுகு
காற்றாயுதத்தை வீசி
கொல்ல சீறுகிறது இருள்
முற்பாதியில் ஓங்கும்
மெழுகின் கை
பிற்பாதியில் பின்வாங்குகிறது
போர்காரணமே அறியாது
களம் புகும்
கடைவரிசை வீரனாய்
கொடுத்த பணியை
முடிக்கும் முனைப்பில்
முழுதாய் மடிந்த மெழுகின் உருகியோடும் குருதியில்
சுடரும் உடன்கட்டை ஏறுகிறது
மாண்ட மெழுகிற்கு
சுற்றமும் இருண்டு
இறுதி மரியாதை செய்ய
வெற்றிக் களிப்பில் இருளின் முகம் இன்னும் இருளால் ஒளிர்கிறது
வெல்வதும் வெல்லப்படும் என்றறியா வெகுளியாய்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!