நானொரு வீட்டின் வாசல் கதவு
பச்சை நிறத்தோடு பாந்தமாய் நிற்கிறேன்
வீட்டிலுள்ள இதயங்களின் நுழைவு வாயிலாக (வாசல்)
முந்தானைச் சொருகி
வெந்நீரில் கையிட்டு
தூய்மை செய்யும் அம்மா
மெதுவாகத் தொட்டு
பாதுகாப்பாய், பத்திரமாய்
அன்போடுப் பூட்டும் அப்பா
பூட்டும் ஒலியில்
ஓடி வந்து
உற்றுப் பார்க்கும் அண்ணன்
அன்பும், பாசமும்,
எதிர்பார்ப்பும் கலந்து
என்னைத் தட்டும் விருந்தினர்கள்
கொஞ்சம் கோபத்தோடு
‘டம்’ என மூடும்
சத்தத்தால் என்
நெஞ்சைத் தாக்கும் சிலர்
உருவில் கதவாய்த் தோன்றினாலும்
என்னுள் நிறைந்தன
பல நினைவுகள்…
இங்கே தான் அவன் “அம்மா!” என்று முதன்முறை அழைத்தான்…
இங்கேதான் அவர்கள் காதலர்கள் ஆனார்கள்…
இங்கேதான் அவள்
கண்ணீர் விட்டு வெளியேறினாள்…
ஒரு வீட்டின் வாழ்வும்
அதில் வாழ்ந்தவர்களின் கதைகளும் தெரிந்தவன் நான்
அசையாத மூன்றடி மரமாக இருந்தாலும் …
உள்ளத்தில் உள்ளதை உணரும் உயிருள்ள கதவே நான்…
நா. பத்மாவதி