சின்னஞ்சிறு உடலுக்கு
மண்ணாடை தரித்து
ஆழக் காலூன்றி
அசையாத தவக்கோலத்தில்
சிந்தை சிந்தாது
சிறுகச்சிறுக தனைவடித்து
வெடித்து முகம்காட்டி
வானெட்டிப் பார்க்கையிலே
அரையெட்டு காலன்களின்
களவாடல் கடந்து
பெருங்காற்றின் பெருமுத்தந்தாங்கி
கார்மேகங்களின் கண்ணீருடைத்து
கணுக்காலி கடிதாண்டி
கருக்கொண்டு பிரசவித்து
பிறவிப்பலனெய்திய விதை
கொத்துக்கனியாய் குதித்தாடி
களித்துக் கொண்டாடுகிறது
காத்திருந்து உழைப்புக்கோர்த்தெடுத்த
நிறைவான வெற்றியை
நிறைவாய் தொட்டபின்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: சின்னஞ்சிறு
previous post